ரஷ்யா உக்ரேன் மீது ட்ரோன் தாக்குதல்!

19.05.2025 08:26:19

ரஷ்யா ஞாயிற்றுக்கிழமை (18) உக்ரேன் மீது போர் தொடங்கியதிலிருந்து அதன் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியது.

இந்த தாக்குதல் வீடுகள் மற்றும் கட்டிடங்களை அழித்ததுடன், ஒரு பெண்ணின் உயிரிழப்புக்கும் வழி வகுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இடையே போர் முடிவுக்கு வருவது குறித்து எதிர்பார்க்கப்படும் தொலைபேசி அழைப்புக்கு முன்னதாக இந்த தாக்குதல் வந்துள்ளது.

ரஷ்யா ஒரே இரவில் 273 ஷாஹெட் ட்ரோன்களை ஏவியதாக உக்ரேனிய விமானப்படை தெரிவித்துள்ளது.

முக்கியமாக மத்திய கீவ் பகுதியை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அங்கு 28 வயது பெண் ஒருவர் இதனால் உயிரிழந்தார்.

மேலும், 4 வயது குழந்தை உட்பட மூன்று பேர் இந்த தாக்குதலில் காயமடைந்ததாக பிராந்திய ஆளுநர் தெரிவித்தார்.

போர் நிறுத்தம் குறித்து திங்கட்கிழமை (19) புட்டினுடன் தொலைபேசியில் பேசுவதாக ட்ரம்ப் கூறிய நிலையில் இந்த தாக்குதல் நடந்தது.

 

30 நாள் போர் நிறுத்தத்திற்கான வொஷிங்டன் மற்றும் கீவ் முன்மொழிவை ரஷ்யத் தலைவர் முன்னர் புறக்கணித்துள்ளார்.

மேலும், கடந்த வாரம் இஸ்தான்புல்லில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி விடுத்த அழைப்பை அவர் நிராகரித்தார்.

இதனிடையே, புட்டினுடன் பேசும் வரை அமைதிப் பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும் என்று தான் நினைக்கவில்லை என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

இரு தலைவர்களுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடலுக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் சனிக்கிழமை உறுதிப்படுத்தினார்.

 

அமெரிக்க ஜனாதிபதி, புட்டினுடன் அதிகரித்து வரும் பதட்டத்தால் விரக்தியில் இருப்பதாக பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப் ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

முந்தைய நாள் ட்ரம்புடன் தொலைபேசியில் பேசிய பின்னர் அவர் கூறினார்.

இதற்கிடையில், கிழக்கு டோனெட்ஸ்க் பகுதியில் சனிக்கிழமை ரஷ்ய ட்ரோன்கள் தெற்கு கெர்சன் மற்றும் சபோரிஜியா பகுதிகளை குறிவைத்ததால், ரஷ்ய ஷெல் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் எட்டு பேர் காயமடைந்தனர் என்று பிராந்திய இராணுவத் தலைவர்கள் தெரிவித்தனர்.

 

கடந்த 24 மணி நேரத்தில் 75 உக்ரேனிய ட்ரோன்களை ரஷ்யப் படைகள் சுட்டு வீழ்த்தியதாக மொஸ்கோவின் பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி அரசு நடத்தும் செய்தி நிறுவனமான டாஸ் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.