திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை.
|
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், ஆளும் தி.மு.க. கூட்டணியில் பிரதான கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று காலை 10.30 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடத்துகிறது. இந்த பேச்சுவார்த்தையின் போது தான் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதி கிடைக்கும் என்பது தெரியவரும். 2021 சட்டசபை தேர்தலில் இருந்த கூட்டணியை விட மிகப்பெரிய கூட்டணியை இந்த முறை ஸ்டாலின் அமைத்துள்ளார். |
|
திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், கொங்கு நாடு மக்கள் கட்சி, மக்கள் நீதிமய்யம், முஸ்லீம் லீக், தேமுதிக என பெரிய லிஸ்டே இருக்கிறது. இந்த கூட்டணி கட்சிகள் எல்லாமே கடந்த முறையைவிட அதிக சீட் எதிர்பார்க்கின்றன. இது ஒருபுறம் எனில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் உள்பட பலர் திமுகவில் இணைந்துள்ளனர். அவர்களுக்கும் சீட் ஒதுக்க திமுக விரும்புகிறது. எனவே வழக்கத்தைவிட இந்த முறை கூட்டணி கட்சிகளுக்கு சீட்டை குறைவாகவே தரும் என்கிறார்கள். ஆனால் காங்கிரஸ் உள்பட கூட்டணி கட்சிகள் அதிக சீட்டை எதிர்பார்க்கின்றன. இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான 7 பேர் கொண்ட பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு உடன் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இதில், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், தேசிய செயலாளர் நிவேதித் ஆல்வா ஆகிய 4 பேர் மட்டும் கலந்து கொள்ள உள்ளனர். தேசிய செயலாளர் சூரஜ் ஹெக்டே உடல்நல குறைவால் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பங்கேற்கவில்லையாம். ஆட்சி அதிகாரத்தில் பங்கு, அதிக எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை காங்கிரஸ் முன்நிறுத்தி வருகிறது. ஆனால் இன்று நடக்கும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் தரப்பில் பேச இருக்கும் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் குறைந்தபட்சம் 35 தொகுதிகளாவது வேண்டும் என்று கேட்பார் என்று கூறப்படுகிறது. தி.மு.க. தரப்பில் ஏற்கனவே வழங்கப்பட்ட 25 தொகுதிகள் மட்டுமே வழங்கப்படும் என்று தி.மு.க. வட்டாரங்களில் அறியப்படுகிறது. எனவே, இந்த பேச்சுவார்த்தை இன்றுடன் சுமூகமாக முடியுமா? அல்லது காங்கிரஸ் பிடிவாதமாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். |