கொரோனா தொடர்பான காப்புச் செயல்களில் கவனம் குறைதல் தவறு – சி.யமுனாநந்தா

05.08.2021 05:09:00

எமது பிரதேசத்தில் கொவிட் தடுப்பு மருந்து பெற்றுக்கொண்டவர்கள் பொதுவாக 30 வயதிற்கு மேல் உள்ளது. இதனால் கொவிட் நோய் தொடர்பான காப்புச் செயல்களில் கவனம் குறைதல் தவறாகும். சமூக இடைவெளி பேணல், முகக்கவசம் அணிதல், கைகளைக் கழுவுதல், நெருக்கமான இடங்களை தவிர்த்தல் என்பன முக்கியமாக மேற்கொள்ளவேண்டியவையாகும் என மருத்துவர் சி.யமுனாநந்தா குறிப்பிட்டார்.

மேலும் அவரது அறிக்கையில்…

கொவிட் தடுப்பூசி பெறாதவர்கள் திரிபடைந்த கொவிட் தொற்றினால் பாதிக்கப்படவும், திரிபடைந்த கொவிட் தொற்றினை பரப்புபவர்களாகவும் மாறுவர். எனவே கொவிட் தடுப்பூசி பெறவேண்டிய அனைவரும் தவறாது தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வது அவசியமாகும். அடுத்து சமூக இடைவெளி பேணாது, முகக்கவசம் அணியாது சாதாணமாக செயற்படும்போது சிறுவர்களில் கொவிட் தொற்று அதிகம் ஏற்படும். இதனால் தற்போது 12 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொவிட் தடுப்பூசி பெறல் தொடர்பாகச் சிந்திக்க வேண்டியுள்ளது. அடுத்து நோயெதிர்ப்புசக்தி குறைந்தவர்களுக்கும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் மூன்றாவது கொவிட் தடுப்பு மருந்தினை முதலாவது தடுப்பு மருந்து செலுத்தி 3 மாதங்களின் பின் செலுத்தலாம்.சமூகத்தில் கொவிட் தடுப்பூசி பெற்றவர்களின் வீதம் மொத்த சனத்தொகையில் 100 வீதத்தினைக் கருதிக் கணிக்கப்படல் வேண்டும். மொத்த சனத்தொகையில் 70  வீதத்திற்கு மேல் தடுப்புமருந்து செலுத்தப்படின் மட்டுமே சமூகத் தொற்றால் குறையும் எனவும் குறிப்பிட்டார்.