குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க டோக்கியோ சென்றடைந்தார் மோடி!

23.05.2022 10:26:49

 

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் அழைப்பின் பேரில் அந்நாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டார்.

இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் இருந்து நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு தனி விமானம் மூலம் பிரதமர் மோடி ஜப்பான் புறப்பட்டுச் சென்றார்.

இந்நிலையில், குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி இன்று அதிகாலை தலைநகர் டோக்கியோ சென்றடைந்தார். தூதரக அதிகாரிகள் உள்பட பலர் பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றனர்.

டோக்கியோ சென்றுள்ள பிரதமர் மோடி இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.

இந்தோ-பசிபிக் மற்றும் பரஸ்பர நலன் தொடர்பான உலகளாவிய பிரச்சினைகள் குறித்த கருத்துக்களை பரிமாறிக்கொள்ள குவாட் மாநாடு வாய்ப்பளிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பான் பயணத்தின்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளேன் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.