ஆணைக்குழுவின் அதிகாரத்தை நிதி அமைச்சு கைப்பற்ற முயற்சி!

29.05.2025 09:07:02

மின் கட்டணம் தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடமுள்ள அதிகாரத்தை நிதி அமைச்சின் வசமாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது நாட்டின் மின் பாவனையாளர்கள் பெற்றுக் கொண்ட உரிமையை மீளப் பெறும் செயற்பாடாகும். அதனை ஒருபோதும் அங்கீகரிக்கப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

கொழும்பில் புதன்கிழமை (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ராஜபக்ஷ ஆட்சியில் ஊழலுக்கு பெயர் போன பீ.ஆர். என்ற நபரைப் போன்று தற்போதைய ஆட்சியிலும் ஒரு பீ.ஆர். இருக்கின்றார். சுமார் 300க்கும் அதிகமான கொள்கலன்களை அவர் எவ்வித பரிசோதனைகளும் இன்றி விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றார். நிச்சயம் பரிசோதிக்கப்பட வேண்டியவை என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தும் அவை பரிசோதிக்கப்படவில்லை.

இது ஊழல், மோசடிக்கு அரசாங்கம் துணைபோகும் ஒரு செயற்பாடாகும். இது தொடர்பில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெளிவுபடுத்துவதோடு, பொறுப்பு கூறவும் வேண்டும்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊழல்களில் பிமல் ரத்நாயக்க முன்னோடியாகவுள்ளார். ஒருபுறம் இவ்வாறு மோசடிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அரசாங்கம் மறுபுறம் மின் கட்டணத்தை அதிகரித்து அந்த சுமையை மக்கள் சுமத்துவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறது.

அதன் ஒரு அங்கமாக சுயாதீன ஆணைக்குழுவான பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரத்தை நீக்குவதற்கான ஏற்பாடுகளை புதிய மின்சாரசபை சட்டத்தில் உள்ளடக்குவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது.

அதற்கமைய மின் கட்டணம் தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு காணப்படும் அதிகாரத்தை, நிதி அமைச்சின் வசமாக்குவதற்கான உள்ளடக்கங்கள் குறித்த சட்ட மூலத்தில் உள்ளடக்கப்படவுள்ளன.

இது பிரஜைகளின் உரிமைகளை முடக்கும் அநீதியான செயற்பாடாகும். நாட்டின் மின் பாவனையாளர்கள் பெற்றுக் கொண்ட உரிமையை மீளப் பெறும் செயற்பாடாகும்.

நாட்டு பிரஜைகளின் உரிமைகளைப் பாதுகாப்போம் என உறுதியளித்து ஆட்சியைக் கைப்பற்றிய அரசாங்கம், மக்களின் உரிமைக்காக நிறுவப்பட்ட பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவை அதிகாரமற்றதாக்குவதற்காக செயற்பட்டு வருகிறது. இது வெட்கப்பட வேண்டிய விடயமாகும்.

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரத்தைக் குறைப்பதற்கான எந்தவொரு சட்ட மூலத்துக்கும் ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்காது.

அது மாத்திரமின்றி அரசாங்கம் அவ்வாறானதொரு சட்ட மூலத்தை முன்வைக்கும் பட்சத்தில் அதற்கெதிராக உயர் நீதிமன்றத்திடம் சென்று நியாயம் கோருவதற்கும் பின்வாங்கப் போவதில்லை. ஜனநாயகம் என்பது மக்களின் விருப்பமாகும். அந்த ஜனநாயகத்தை இல்லாதொழிப்பதற்கும் அரசாங்கத்துக்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றார்.