பயணங்களைத் தவிர்க்க வேண்டும் – WHO

01.12.2021 11:11:00

அறுபது வயதுக்கு மேற்பட்டோர்,மற்றும் நோயின் தீவிர நிலையை எட்டக்கூடிய பலவீனமான உடல் வலுக் கொண்டவர்கள் பயணங்களைத் தவிர்த்துக்கொள்ளவேண்டும்.இவ்வாறு உலக சுகாதார அமைப்பு ஆலோசனை தெரிவித்துள்ளது.

ஆபத்தானதும் குழப்பமானதுமான ஒமெக்ரோன்(Omicron) கோவிட் திரிபுஉலகெங்கும் பரவி வருவதை அடுத்தே இவ்வாறு பயண ஆலோசனை வெளியிடப்பட்டிருக்கிறது.இருதய நோய்கள், நீரிழிவு, புற்றுநோய் போன்றவற்றால் அவதிப்படுவோரும் மற்றும் பொதுவாக நோய் எதிர்ப்புச்சக்தி குறைவாகக் காணப்படுகின்ற வயது வரம்பை எட்டியவர்களுமே வெளிநாடுகளுக்கான பயணங்களைத் தவிர்க்குமாறு கேட்கப்பட்டிருக்கின்றனர்.

உலக நாடுகள் கோவிட் வைரஸின் நான்காவது, ஐந்தாவது அலைகளை எதிர்கொண்டுள்ளன. இந்த சமயத்தில் தடுப்புமருந்துகளுக்குக் கட்டுப்படாத ஒமெக்ரோன் என்னும் மிக அதிக பிறழ்வுகளை எடுக்கும் திரிபு பரவத் தொடங்கி உள்ளது ஆபத்தான ஒமெக்ரோன் திரிபு பரவுவது பற்றிய முதல் எச்சரிக்கையை தென்ஆபிரிக்கா கடந்த வாரம் வெளியிட்டது.அதனை அடுத்து உலகின் பல நாடுகளும் தென் ஆபிரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகளுடனான போக்குவரத்துகளை அவசரமாகத் துண்டித்தன.

இவ்வாறு நாடுகளுக்கு இடையே எழுந்தமானமாகப் பயணத் தடை விதிப்பதுவைரஸ் பரவலைக் கட்டுப்படுத்திவிடாது என்றும்-மாறாக நாடுகள் மீதும் அங்கு வாழும் மக்கள் மீதும் அது தேவையற்ற சுமைகளையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தும் என்றும் உலக சுகாதாரஅமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

திரிபு தோன்றியதற்காக ஒரு நாட்டின்மீது தார்மீகப்பொறுப்பைச் சுமத்திக்குற்றம் காண்பது நாடுகள் தங்களுக்கு இடையே தொற்று நோய்கள் மற்றும்மரபுவரிசை ஆய்வுகள்(epidemiological and sequencing data) சம்பந்தமான தரவுகளை பரிமாறிக் கொள்வதைப் பாதிக்கலாம்என்று ஐ. நா. சபை எச்சரித்துள்ளது