பாரத் ரத்னா விருதுகளை வழங்கிய குடியரசுத் தலைவர்...!!

30.03.2024 09:07:59

டெல்லியில் பாரத ரத்னா விருதுகளை  குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.

நாட்டிலேயே மிக உயரிய விருதாகக் கருதப்படும் பாரத ரத்னா விருதுகளை வழங்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. மறைந்த முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ், சரண் சிங் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதுகளை அவர்களது குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர். 

நரசிம்மராவ் சார்பில் அவரது மகன் பி.பி. பிரபாகர் ராவ் பெற்றுக் கொண்டார். சரண் சிங் சார்பில், அவரது பேரன் ஜெயந்த் சௌதரி, குடியரசுத் தலைவரிடமிருந்து விருதினை பெற்றுக்கொண்டார்.

மேலும், பசுமை புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் எம்.எஸ். சுவாமிநாதனுக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. அவர் கடந்தாண்டு காலமான நிலையில், அவரது மகள் நித்யா ராவ் விருதுதினை பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து, மறைந்த பிகார் மாநில முன்னாள் முதல்வரும் சோஷலிச தலைவருமன கர்பூரி தாக்குருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவ்விழாவில், குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பாஜக மூத்த தலைவர் எல்.கே அத்வானிக்கு நேரில் சென்று பாரத ரத்னா விருதை குடியரசுத் தலைவர் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது