அதிகாரம் மாறினால் வடகொரிய சட்டம் இலங்கைக்கு...!

03.02.2023 00:16:04

மக்கள் விடுதலை முன்னணிக்கு இலங்கையை ஆட்சி செய்யும் அதிகாரம் கிடைத்தால் எதிரிகள் கொல்லப்படுவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தி எச்சரித்துள்ளது.

வடகொரியாவில் நடைமுறைப்படுத்தப்படும் சட்டம் மக்கள் விடுதலை முன்னணியால் இலங்கையிலும் நடைமுறைப்படுத்தப்படும் என கம்பஹாவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் தனவர்தன குருகே சுட்டிக்காட்டியுள்ளார்.

3 முறை வன்முறை

இலங்கையின் அரசியலில் 3 முறை வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட மக்கள் விடுதலை முன்னணி தற்போது தேசிய மக்கள் சக்தி எனும் போர்வையில் அதனை மீண்டும் செய்ய முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் தனவர்தன குருகே குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துடன், மணி சின்னத்தை விட்டுவிட்டு தற்போது திசைகாட்டி சின்னத்தை பயன்படுத்தி அவர்கள் மக்களை ஏமாற்ற முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மக்கள் அவர்களை தெரிவு செய்தால் எதிர்காலத்தில் பல பின்விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என தனவர்தன குருகே எச்சரித்துள்ளார்.

இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணி திசைகாட்டியை விட்டுவிட்டு துப்பாக்கி தோட்டாவையே தங்கள் சின்னமாக தெரிவு செய்திருக்க வேண்டுமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.