எரிபொருள் பவுசர்ருக்கு தேங்காய் உடைத்து வரவேற்பு

22.06.2022 05:54:50

நாட்டில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் யாழ்ப்பாணம்-நெல்லியடி எரிபொருள் நிரப்பு நிலைத்திற்கு எரிபொருள் பவுசர்ருக்கு பிரதேச மக்கள் தேங்காய் உடைத்து வரவேற்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

எரிபொருள் பெற்றுக்கொள்ள இன்றும் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்த நிலையில் எரிபொருள் பவுசர் பல மணிநேரம் வரவில்லை.

நெல்லியடி பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில்   எரிபொருளுக்காக நூற்றுக்கணக்கான மக்கள் வாகனங்களுடன் காத்திருந்துள்ளனர்.

இதேவேளை கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட எரிபொருள் அட்டை பெற்றுக்கொண்டவர்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டிகளுக்கு 3000 ரூபாவிற்கும், மோட்டார் சைக்கிள்களுக்கு 2000 ரூபாவிற்கும் பெட்ரோல் வழங்கப்படும் என ஒலிபெருக்கி மூலம் கரவெட்டி பிரதேச செயலகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான வாகனங்களுடன் மக்கள் கால்கடுக்க காத்திருந்துள்ளனர். நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் பெட்ரோல் வழங்குவதற்கான ஒழுங்குபடுத்தும் பணிகள் இடம்பெற்றது.

இவ்வாறான நிலையிலேயே அங்கு வந்த எரிபொருள் பவுசரை தேங்காய் உடைத்து பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.