உக்ரைன் ஜனாதிபதி – டிரம்ப் விசேட தொலைபேசி உரையாடல்!

21.07.2024 09:23:47

ரஷ்ய பயங்கரவாதத்திற்கு எதிரான எங்களுடைய திறனை வலுப்படுத்த உதவியமைக்கு அமெரிக்காவுக்கு உக்ரைன் எப்போதும் நன்றியுடன் இருக்கும் என ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பரில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளதுடன், இதில், குடியரசு கட்சிக்கான வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த தேர்தலை முன்னிட்டு, பல்வேறு வெளிநாட்டு தலைவர்களிடம் டிரம்ப் ஆதரவு கோரி பேசி வரும் நிலையில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி மற்றும் டிரம்ப் ஆகிய இருவரும் தொலைபேசி வழியே பேசி கொண்டுள்ளனர்.

அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலுக்கான குடியரசு கட்சிக்கான வேட்பாளராக நியமிக்கப்பட்டதற்காக, எனக்கு உக்ரைன் ஜனாதிபதி வாழ்த்துகளை தெரிவித்தாகவும் அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக உலகத்திற்கு நான் அமைதியை கொண்டு வருவேன் எனவும் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

 

மேலும், பல உயிர்களை பலி வாங்கி, எண்ணற்ற குடும்பத்தினரை துன்பத்தில் ஆழ்த்திய போரை முடிவுக்கு கொண்டு வருவேன் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வெளியிட்ட எக்ஸ் பதிவில், அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலுக்கான குடியரசு கட்சி வேட்பாளராக நியமிக்கப்பட்டதற்காக, டிரம்புக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டதாகவும் பென்சில்வேனியாவில் நடந்த அதிர்ச்சிகர கொலை முயற்சிக்கு கண்டனமும் தெரிவித்தாக அவர் பதிவிட்டுள்ளார்