கருணாநிதி இயற்றிய சட்டம்.
|
திமுக இளைஞரணி செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் உதயநிதி மீது பதிவு செய்யப்பட்ட முக்கிய வழக்கு பிரிவுகளில் ஒன்று அவரது தாத்தா கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது கொண்டு வரப்பட்ட சட்டம். பின்னர் அவரது தந்தை மு.க.ஸ்டாலின் அந்தச் சட்டத்தை மேலும் கடுமையாக்கியிருந்தார். தற்போது அதே சட்டத்தின் கீழ் உதயநிதி கைது செய்யப்பட்டுள்ளார். |
|
தஞ்சாவூரில் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக திமுக சார்பில் நேற்று ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, முதலமைச்சர் விஜய் மற்றும் பிரபல நடிகை குறித்து அவதூறாகவும், இரட்டை அர்த்தம் கொண்ட வகையிலும் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக தவெக மகளிரணி நிர்வாகி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் தஞ்சாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். உதயநிதி கைது அதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள நீலாங்கரை இல்லத்துக்கு இன்று காலையே சென்ற தஞ்சாவூர் மற்றும் சென்னை போலீசார் குவிந்தனர். திமுகவினர் கடும் எதிர்ப்பை தாண்டி உதயநிதியை கைது செய்யப்பட்டார். இப்போது அவர் சாலை மார்க்கமாக தஞ்சாவூருக்கு அழைத்து செல்லப்படுகிறார். கைதை தடுக்க திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டாலும், போலீசார் கைது செய்தனர். சட்டம் இப்போது உதயநிதி மீது பாரதிய நியாய சன்ஹிதா, அதாவது BNS சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சமூக ஒற்றுமையை பாதிக்கும் வகையில் செயல்பட்டது, சட்டவிரோத கூட்டம், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பது, பெண்ணின் மரியாதையை இழிவுபடுத்தும் வகையில் பேசியது, பொது இடத்தில் ஆபாசமாக பேசியது, குற்ற சதி, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. அத்தோடு சேர்த்து தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-ன் பிரிவு 67-ன் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இணையம் அல்லது மின்னணு தளங்கள் மூலம் ஆபாசமான கருத்தை வெளியிடுவது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதே இந்த சட்டப்பிரிவாகும்! இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் உதயநிதி மீது பதிவு செய்யப்பட்ட முக்கிய குற்றச்சாட்டு தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம், 1998ன் பிரிவு 4 ஆகும். இந்தச் சட்டம் முதலில் 'ஈவ்-டீசிங் தடுப்புச் சட்டம்' என்ற பெயரில் 1998ல் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசால் கொண்டு வரப்பட்டது. சென்னை எத்திராஜ் கல்லூரி மாணவி சரிகா ஷா மீது நடைபெற்ற ஈவ்-டீசிங் சம்பவம் அப்போது மாநிலம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அரசியல் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட நிர்வாகிகள் சிலர், சரிகா ஷாவிடம் ஈவ் டீசிங் செய்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்த அவர், தலையில் பலத்த காயமடைந்தார். அவர் சில நாட்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்துக்குப் பிறகே பெண்களுக்கு எதிரான தொல்லைகளை தடுக்கும் நோக்கில் இந்த சட்டம் இயற்றப்பட்டது. பின்னர், பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான துன்புறுத்தல்களையும் உள்ளடக்கும் வகையில் சட்டத்தின் பெயர் 'தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்பு சட்டம்' என மாற்றப்பட்டது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்தாண்டு ஜனவரி 25 இந்த சட்டத்தில் முக்கிய திருத்தத்தை கொண்டு வந்தது. அதன்படி, பிரிவு 4-ன் கீழ் முதல் முறையாக குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். மீண்டும் அதே தவறை செய்தால்.. குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறை மற்றும் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் வகையில் சட்டம் மேலும் கடுமையாக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூருக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இதற்கிடையே உதயநிதி ஸ்டாலினை காவலில் சிறையில் அடைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் விசாரணைக்கு பிறகு காவல் நிலையே ஜாமீனிலேயே விடுவிக்கப்படுவார் என்றும் போலீசார் கூறினர். இதற்கிடையில் இந்த கைதை கண்டித்து திமுக மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் திமுக தொண்டர்கள் பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். |