ஜெனிவா பக்க அமர்வில் இலங்கை நிலவரம் குறித்து ஆராய்வு!
|
தற்போது நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான அறிக்கைகள் மற்றும் விவாதங்கள் எவையும் இல்லாத நிலையில், பிரான்ஸை தளமாகக்கொண்டு இயங்கிவரும் Jeunesse Etudiante Tamoule எனும் அரச சார்பற்ற அமைப்பினால் நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பக்க நிகழ்வில் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் ஆராயப்படவுள்ளது. |
|
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (23) ஆரம்பமாகி, எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரின்போது 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' எனும் தீர்மானத்தை மேலும் இரு வருடகாலத்துக்கு நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதன்பிரகாரம் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைவரம் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் எழுத்துமூல அறிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் 63 ஆவது கூட்டத்தொடரிலும், விரிவான அறிக்கை அடுத்த ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் 66 ஆவது கூட்டத்தொடரிலும் சமர்ப்பிக்கப்படும். ஆகவே இம்முறை நடைபெற்றுவரும் 61 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் அறிக்கைகள் எவையும் சமர்ப்பிக்கப்படமாட்டாது என்பதுடன் விவாதங்களும் இடம்பெறாது. இருப்பினும் இப்பேரவை அமர்வில் இலங்கை சார்பில் பங்கேற்கும் ஜெனிவாவுக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதி சுமித் தஸநாயக்க தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர், ஏனைய நாடுகளின் விவகாரங்கள் தொடர்பான விவாதங்களின்போது இலங்கை சார்பில் கருத்துரைப்பர். அதேவேளை இக்கூட்டத்தொடரின் பக்க நிகழ்வாக பிரான்ஸை தளமாகக்கொண்டு இயங்கிவரும் அரச சார்பற்ற அமைப்பினால் நாளை மறுதினம் (27) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலந்துரையாடலில் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் ஆராயப்படவுள்ளது. |