அடுத்தடுத்து கரையொதுங்கும் மனித உடல்கள் !

28.11.2021 17:00:54

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு காவல்துறைப் பிரிவிற்கு உட்பட்ட, 5ஆம் வட்டாரம் திரிலிங்கபுரம் கடற்கரையில் சிதைவடைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

சடலம் குறித்த பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களால் இன்று அவதானிக்கப்பட்ட நிலையில் நெடுந்தீவு காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், மேலதிக விசாரணை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை மணல்காடு பகுதிகளில் நேற்றும் இரு உடல்கள் கரை ஒதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அடுத்தடுத்து சடலங்கள் கரையொதுங்கி வரும் நிலையில், இதற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் இதுவரை கண்டறியப்படவில்லை.