அரசியல் கட்சியிலோ அல்லது அரசியல்வாதி மீதோ குற்றம் சுமத்தவில்லை.

26.11.2021 16:00:00

பொதுவிவாதத்திற்கு சுமந்திரன் தயாரானால் பதிலளிக்க தாங்கள் தயார் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் (Rajkumar) தெரிவித்தார்.

வவுனியாவில் காணாமல் போன உறவினர்கள் இன்று (26), தொடர் போராட்டம் மேற்கொள்ளும் போராட்ட பந்தலில் ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்தியிருந்தார்கள்.

அவ் ஊடக சந்திப்பின் போது உங்களுடைய நோக்கத்திலிருந்து மாறி தொடர்ச்சியாக நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மீது குற்றம் சுமத்தி வருகிறீர்கள். அதற்கான காரணத்தை கூறமுடியுமா? என ஊடகவியலாளரால் வினவப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “நாங்கள் எந்த அரசியல் கட்சியிலோ அல்லது அரசியல்வாதி மீதோ குற்றம் சுமத்தவில்லை. 2015ஆம் ஆண்டு எங்கள் போராட்ட காலத்தில் வவுனியா வன்னியன் விடுதியில் தேர்தலுக்கு முன்னர் சந்தித்திருந்தோம். அப்போது சம்பந்தன் ஐயா கூறியிருந்தார்.... தேர்தலுக்கு பின்னர் காணமலாக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகளின் பிரச்சினைகளை தான் முன்னின்று தீர்ப்பதாக.

அதற்கு பின்னர் அவர் அரசோடு இணைந்து செயற்பட்ட போது அரசியல் கைதி, காணமலாக்கப்பட்டவர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கான சாவி தன்னிடமில்லை எனக் கூறியிருந்தார். அந்த அடிப்படையில் மக்கள் ஓர் சிறிய அமைப்புக்களாக உருவாகி சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோம்.

அதில் நான்காம் நாள் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ருவான்விஜயரத்ன 14 நாள் கோரிக்கையில் எமக்கான மூன்று கோரிக்கைகளான காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பு, அரசியல் கைதிகளுக்கான விடுதலை , பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குதல் போன்றவற்றிற்கு தான் தீர்வினை பெற்றுதருவதாக அலரிமாளிகை உயர்மட்ட சந்திப்புக்கு அழைத்திருந்தார். அங்கு உயர்மட்ட அதிகாரிகள் பலர் வந்திருந்தார் அதில் அழையா விருந்தாழியாக சுமந்திரனும் வந்திருந்தார்.

அங்கு எங்களுக்கு சுமந்திரன் கூறியிருந்தார், காணமலாக்கப்பட்டவர்களின் பிரச்சினை தொடர்பாக தன்னுடன் தான் கதைக்க வேண்டும் என, ஆனால் சம்பந்தன் ஐயா கூறியிருந்தார் தமக்கு அதற்கான சாவி இல்லை என. ஆனால் சுமந்திரன் கூறினார் காணாமலாக்கப்பட்டவர்களின் பிரச்சினை தொடர்பாக அரசாங்கம் தன்னுடன் தான் கதைக்க வேண்டும் என எங்களுடன் கதைக்க வேண்டாம் என அரசாங்கத்தை எச்சரித்துவிட்டு சென்றார்.

இதன் அடிப்படையில் தான் நாங்கள் சுமந்திரன் தொடர்பாக பல விடயங்களை ஆராய்ந்திருந்தோம். அப்போது தான் சுமந்திரன் தமிழ்மக்களுகான நீதிக்கு, தீர்வுக்கு தடையாக இருக்கின்றார் எனவும், தமிழ்மக்களை ஒற்றையாட்சிக்கு முடக்குகிறார் எனவும் அறிந்து கொண்டோம்.

பின்னர் நாம் போராடிக்கொண்டிருக்கும் போது வவுனியாவில் 4000 சிங்கள குடும்பங்களுக்கு உறுதியினை கையளித்திருந்தவர். ஆனால் காணியில்லாமல் எத்தனையோ தமிழ்மக்கள் இருக்கிறார்கள். இதனை நாம் ஒரு குற்ற செயலாகவே பார்க்கின்றோம்.

நாங்கள் நேரடியாக ஒரு பொது விவாதத்திற்கு வரத் தயாராக இருக்கின்றோம். பகிரங்கமாக சுமந்திரனிடம் எங்களுக்கு அவர் செய்த விடயங்களை பட்டியலுடன் கேள்வி கேட்க தயாராக இருக்கின்றோம்.

பொது விவாதத்திற்கு அவர் தயாரானால் பதிலளிக்க நாங்களும் தயாராக இருக்கின்றோம்” என மேலும் தெரிவித்தார்.