CJP பாணியில் உருவான E20 ஜனதா கட்சி.
|
CJP பாணியில் உருவாகியுள்ள E20 ஜனதா கட்சி, மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை ராஜினாமா செய்ய கோரியுள்ளது. வேலை இல்லாத இளைஞர்களை கரப்பான் பூச்சியுடன் ஒப்பிட்டு பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 2 மாதங்களுக்கு முன்னர் இணையத்தில் தொடங்கப்பட்டது கரப்பான் பூச்சி ஜனதா கட்சி(CJP). நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என டெல்லியில் கடந்த ஒரு மாத காலமாக, CJP நடத்திய போராட்டம் மோடி அரசையே அசைத்து பார்த்துள்ளது. |
|
12 வருட மோடி அரசில் முதல்முறையாக, மக்களின் போராட்டத்திற்கு பணிந்து ஒரு அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூடுதலாக கல்வி அமைச்சர் பொறுப்பையும் ஏற்றுள்ளார். இதனை தொடர்ந்து, E20 ஜனதா கட்சி என்ற புதிய கட்சி இணையத்தில் உருவெடுத்துள்ளது. இந்தியாவில் பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனால் கலக்கும் அரசின் கொள்கைக்கு வாகன ஓட்டிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எத்தனால் கலக்கப்பட்ட E20 பெட்ரோல் பயன்படுத்துவதால் வாகனத்தின் மைலேஜ் குறைகிறது, என்ஜின் பாதிக்கப்படுகிறது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை வாகன ஓட்டிகள் முன்வைத்துள்ளனர். ஆனால் இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி நிராகரித்துள்ளார். இந்நிலையில், புதிதாக தொடங்கப்பட்ட E20 ஜனதா கட்சி, பெட்ரோல் பங்குகளில் 100% தூய்மையான பெட்ரோலையும் கிடைக்கச் செய்ய வேண்டும், எந்த பெட்ரோல் வேண்டுமோ அதை தேர்வு செய்யும் உரிமையை மக்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறது. CJP கட்சியை போல் E20 ஜனதா கட்சியை பின்தொடர்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. E20 பிரச்சாரமானது, CJPயின் "எல்லா கரப்பான் பூச்சிகளும் ஒன்று சேர்ந்தால் என்னவாகும்?" என்பதை மேற்கோள் காட்டி, "எல்லா பைக்/கார் உரிமையாளர்களும் ஒன்று சேர்ந்தால் என்னவாகும்?" என்று E20 ஜனதா கட்சி கேட்டுள்ளதோடு, நிதின் கட்காரி ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. டெல்லி டாக்சி, சுற்றுலாப் போக்குவரத்து மற்றும் சுற்றுலா நடத்துநர்கள் சங்கம், E20 பெட்ரோலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆகஸ்ட் 4 அன்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. நிதின் கட்கரியின் மகன் நிகில் கட்கரி, Cian Agro என்ற எத்தனால் உற்பத்தி நிறுவனத்தை நடத்தி வருகிறார். E20 கொள்கை அமலுக்கு வந்தபோது, ரூ.40 ஆக இருந்த இந்நிறுவனத்தின் பங்கு விலை, ஒன்றரை ஆண்டுகளில் ரூ.3,600 ஆக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. நிதின் கட்காரி தனது குடும்பத்தினரின் வணிக வருவாயில் எத்தனால் உற்பத்தி மூலம் கிடைக்கும் பங்கு 10 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது, பெருமளவில் லாபம் பெறுவதாக அவதூறு பரப்பப்படுகிறது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். |