
மைத்திரி அரசாங்க அமைச்சருக்கு உயர் பதவி!
முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவருமான மஹிந்த சமரசிங்க (Mahinda Samarasinghe) தேசியப் பட்டியல் மூலம் விரைவில் நாடாளுமன்ற உறுப்பினராக வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில், தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஊடாக அவரை நாடாளுமன்ற உறுப்பினராக்குவதற்கு அக்கட்சியின் உயர்பீடம் தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும், தற்போதைய நிதியமைச்சின் செயலாளருமான கலாநிதி ஹர்ஷண பதவி விலகல் செய்வதன் மூலம் ஏற்பட்ட தேசியப்பட்டியல் வெற்றிடத்துக்கே மஹிந்த சமரசிங்க நியமிக்கப்படவுள்ளார்.
ஏற்றுமதிப் பொருட்கள்
இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்கள் மீது அமெரிக்கா விதித்த 44 வீத தீர்வை வரியை 30 வீதமாகவும் பின்னர் 20 வீதமாகவும் குறைத்துக் கொள்வதில் மஹிந்த சமரசிங்க வழங்கிய பங்களிப்பின் காரணமாகவே அவரை தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் அழைத்து வர தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட பின்னர் அவருக்கு முக்கிய அமைச்சுப் பதவியொன்றும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, அண்மையில் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் இலங்கை மீது அமெரிக்கா விதித்த வரிகளைக் குறைப்பதில் இலங்கை தூதுக்குழு மற்றும் அமெரிக்காவில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகள் ஆற்றிய பங்களிப்பை ஜனாதிபதி பாராட்டியிருந்தார்.
இதில் மஹிந்த சமரசிங்க உள்ளிட்ட தரப்பினரை அநுர வாழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.