இலங்கைக்கு மிகப்பெரிய பொருளாதாரப் பேரிடி.
மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் 20ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், மேலை நாடுகளுக்கு எதிராக ஈரான் 'முழு அளவிலான பொருளாதாரப் போரை' (Full-scale economic war) அறிவித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, உலகின் மிக முக்கியமான எரிசக்தி வழித்தடமான ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) ஈரான் முடக்கியுள்ளதால், சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை விரைவில் 200 டாலரை எட்டும் என்று ஈரான் இராணுவத் தளபதி இப்ராஹிம் ஜுல்பகாரி எச்சரித்துள்ளார்.
"பிராந்திய பாதுகாப்பைச் சீர்குலைத்தவர்களுக்கு ஒரு சொட்டு எண்ணெய் கூடக் கிடைக்காது" என்ற ஈரானின் இந்த மிரட்டல், உலக நாடுகளைப் பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.
ஈரானின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, சவுதி அரேபியாவின் 'சம்ரெஃப்' (Samref) சுத்திகரிப்பு ஆலை மற்றும் கத்தாரில் உள்ள 'ராஸ் லப்பான்' (Ras Laffan) எரிவாயு வளாகம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் அறிவித்துள்ளது.
இதனால், அந்த ஆலைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் உடனடியாக வெளியேறுமாறு ஈரான் புரட்சிகரக் காவல்படை (IRGC) உத்தரவிட்டுள்ளது.
ஏற்கெனவே கத்தார் தனது இயற்கை எரிவாயு (LNG) உற்பத்தியை முற்றிலும் நிறுத்தியுள்ள நிலையில், இந்தத் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் எரிசக்தித் தட்டுப்பாடு உச்சத்தை எட்டியுள்ளது.
இந்தத் திடீர் திருப்பத்தால் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 6% அதிகரித்து தற்போது 110 டாலரைக் கடந்துள்ளது. 1970-களுக்குப் பிறகு உலகம் காணாத மிகப்பெரிய எரிசக்தி அதிர்ச்சியாக இது பார்க்கப்படுகிறது.
நிலைமையைக் கட்டுப்படுத்த சர்வதேச எரிசக்தி முகமை (IEA) தனது கையிருப்பில் இருந்து 400 மில்லியன் பேரல் எண்ணெயை வெளியிட முடிவு செய்துள்ள போதிலும், ஹார்முஸ் நீரிணை முடக்கப்பட்டிருப்பதால் விநியோகச் சங்கிலி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவின் எண்ணெய் வயல்கள் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் முதலீட்டாளர்களைக் கவலையடையச் செய்துள்ளன.
இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆகியோர் ஈரானின் பொருளாதார முதுகெலும்பை உடைப்பதே தங்களது இலக்கு என்று கூறியுள்ளனர்.
ஆனால், பதிலுக்கு ஈரான் தனது ஏவுகணைகள் மூலம் வளைகுடா நாடுகளின் பொருளாதார மையங்களைக் குறிவைத்து வருவதால், உலகளவில் பெட்ரோல், டீசல் விலை மட்டுமன்றி உணவுப் பொருட்களின் விலையும் பன்மடங்கு உயரும் என்றும் இலங்கை போன்ற இறக்குமதியை நம்பியுள்ள நாடுகளுக்கு இது ஒரு மிகப்பெரிய பொருளாதாரப் பேரிடியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை எனவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்