திருகோணமலையை கொழும்புடன் இணைக்க காய் நகர்த்தும் அநுர.
அண்மையில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath), மன்னாரில் (Mannar) இருந்து திருகோணமலைக்கு (Trincomalee) அமைப்பதாக இருந்த நெடுஞ்சாலையை நாங்கள் இடைநிறுத்தி விட்டோம் ஏனென்றால் அது நாட்டை பிரிக்கும் என ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார்.
அத்தோடு, இலங்கை மற்றும் இந்தியாவிற்கான (India) தரைவழி பாதை அதாவது இராமேஸ்வரம் தொடக்கம் தலைமன்னார் பாதை என்பதை தற்போதைய அரசாங்கம் எவ்விதத்திலும் அனுமதிக்காது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தியா குறித்து அவர் தெரிவித்த கருத்து என்பது சற்று ஏற்றுக்கொள்ள கூடிய விதத்தில் இருந்தாக அரசியல் பரப்பில் பேசப்பட்டது.
காரணம், தற்போதைய அரசின் நிலைப்பாட்டில் இலங்கைக்குள் இந்தியாவின் வருகை என்பது புறக்கணிக்கப்பட்ட விடயமாக காணப்படுவதுடன் இந்தியாவின் பொருளாதார ஆதிக்கம் இலங்கையில் நிலைநாட்டப்படக் கூடாது என்ற அடிப்படையில் அமைச்சரின் கருத்து உள்வாங்கப்பட்டது.
இருப்பினும், மன்னாரில் இருந்து திருகோணமலைக்கு அமைப்பதாக இருந்த நெடுஞ்சாலையை அரசாங்கம் நிறுத்தவதாக அவர் தெரிவித்த கருத்து சற்று சர்ச்சைக்குள்ளாகி இருந்தது.
காரணம், இந்தியா மிகப்பெரிய நாடு என்ற அடிப்படையில் அவர்களுடன் இணைந்தால் அவர்களது பொருளாதார ஆதிக்கம் இலங்கையை விழுங்கி விடும் என்பதால் அதனை ஒத்துழைப்பதில்லை என்பது ஒரு நியாயமான பயமாக ஏற்றுக்கொள்ளப்படலாம்.
ஆனால், ஒரு சிறிய தீவின் கிழக்கையும் மேற்கையும் இணைக்கும் ஒரு நெடுஞ்சாலை நாட்டை பிரிக்கும் என அவர்கள் தெரிவிப்பதில் இருந்து வட பகுதி பொருளாதார ரீதியில் தற்சார்புடையதாக மாறுமாக இருந்தால் அது அரச தரப்புக்கு கட்டுபடுத்த முடியாத ஒன்றாக மாறும் என அவர்கள் சிந்திப்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
இருப்பினும், வடக்கை புறக்கணித்து கொழும்புடன் திருகோணமலையை இணைப்பதற்கான வேலையை தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக ஓய்வு நிலை நிர்வாக சேவை அதிகாரி இரேனியஸ் செல்வின் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.