தனியார் துறையின் வட்டி வீதங்கள் மேலும் குறைய வேண்டும்

08.08.2023 09:34:32

நாட்டின் உண்மையான பொருளாதாரத்தின் மீது நிதிக் கொள்கையின் பரிமாற்றம் இதுவரை சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

தனியார் துறையின் வட்டி வீதங்கள் மேலும் குறைய வேண்டும் என நேற்று (07) இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த மத்திய வங்கியின் ஆளுநர், வீழ்ச்சியடைந்துள்ள பணவீக்க வீதத்திற்கு ஏற்ப கொள்கை வீதங்களை மேலும் தளர்த்துவதற்கான சந்தர்ப்பம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

  நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள பணவீக்கம் மற்றும் பண அழுத்தத்தை கட்டுப்படுத்தும் வகையில் வட்டி வீதத்தை பாரியளவில் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கடந்த இரண்டு மாதங்களில் கொள்கை வீதங்கள் சுமார் 450 அடிப்படை புள்ளிகளால் குறைக்கப்பட்டதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் முன்னறிவித்துள்ள 03 வீத சுருக்கத்தை விட வலுவான பொருளாதார செயற்பாட்டை இலங்கை அடைய முடியும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

பணவீக்கத்தை 4 முதல் 6 சதவீதம் வரை அடைவதே மத்திய வங்கியின் இலக்கு என்றும் அவர் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.