கலையானது இன, மத மற்றும் மொழி க்கு அப்பாற்பட்டதாகும்.
மகத்தான கலையானது இனம், மதம் மற்றும் மொழி ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டது என்றும், மனிதநேயமும் ஒற்றுமையுமே அதன் உண்மையான மொழியாகும் எனவும், கலாநிதி சுஜாதா அத்தநாயக்க போன்ற கலைஞர்களின் படைப்புகள் அந்த உண்மையை எனக்கு உணர்த்தியிருக்கின்றன எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கூறினார்.
கலாநிதி சுஜாதா அத்தநாயக்கவுக்காக நடத்தப்பட்ட கௌரவப் பாராட்டு விழாவில் கலந்துகொண்டபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "கலாநிதி சுஜாதா அத்தநாயக்க பிரணாம" விசேட கௌரவமளிப்பு விழா ஜூலை 28 ஆம் திகதி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்கேற்பில் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் குமாரதுங்க முனிதாச கலையகத்தில் நடைபெற்றது.
ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக, நாட்டின் இசைத்துறைக்கும் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கும் கலாநிதி சுஜாதா அத்தநாயக்க எனும் பாடகி ஆற்றிய சேவையைப் பாராட்டி கௌரவிப்பதே இந்த விழாவின் நோக்க அமைந்தது. அத்தோடு அவரைக் கௌரவிக்கும் வகையில், ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வளாகத்தில் அவருடைய புகைப்படமொன்றைத் திரைநீக்கம் செய்து வைக்கும் நிகழ்வும் இதன் போது இடம்பெற்றது.
இந்த விழாவில் உரையாற்றிய பிரதமர், எட்டு வயதுச் சிறுமியாக ஆரம்பமான கலாநிதி சுஜாதா அத்தநாயக்கவின் இசைப் பயணம் பல தலைமுறைகளின் அன்பை வென்றெடுத்த ஒரு தனித்துவமான கலைப் பயணமாக அமைந்தது எனக் கூறியதோடு, ஒரு தேசத்தின் கலாசார நினைவுகளானவை வரலாற்றுப் புத்தகங்களால் மாத்திரம் கட்டியெழுப்பப்படுவதில்லை என்றும், மாறாக, மக்களின் இதயங்களில் வாழும் படைப்புகள், ஸ்வரங்கள் மற்றும் நினைவுகள் மூலமாகவே அது கட்டியெழுப்பப்படுகின்றது என்றும் தெரிவித்தார். ஆகையினால் அத்தகைய படைப்பாளிகளே ஒரு தேசத்தின் அடையாளத்தைக் கட்டியெழுப்பும் முன்னோடிகளாவார்கள் என்பதைச் சுட்டிக்காட்டியதோடு, அதற்குப் பாடகி கலாநிதி சுஜாதா அத்தநாயக்க சிறந்ததொரு உதாரணமாகும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
ஏழு தசாப்தங்களுக்கும் மேலான காலமாக அவரது குரல் இலங்கை மக்களின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்திருப்பதோடு, மக்களின் சந்தோஷம், துக்கம், அன்பு, பக்தி உள்ளிட்ட வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் முகங்கொடுக்கும் உணர்வுகளோடு அந்தப் பாடல்கள் பின்னணியாக அமைந்தன என்பதை நினைவுகூரிய பிரதமர், "கலாநிதி சுஜாதா அத்தநாயக்க வெறும் பாடல்களை மாத்திரம் பாடவில்லை, உணர்வுகளையும் பாடினார்" எனக் குறிப்பிட்டார்.
பாடுதல் என்பது எத்தகைய ஆத்மார்த்தமான ஒரு கலை ஊடகமாகும் என்பதை கலாநிதி சுஜாதா அத்தநாயக்க தனது வாழ்க்கையின் மூலம் நிரூபித்துள்ளார் எனக் கூறிய பிரதமர், அவரது குரல் ஒருபோதும் ஒரு இனத்திற்கோ, மொழிக்கோ அல்லது ஒரு கலாசாரத்திற்கோ வரையறுக்கப்பட்டதாக இருக்கவில்லை என்பதை வலியுறுத்தினார். சிங்கள, தமிழ் மற்றும் இஸ்லாமிய கலாசாரப் பாடல்களைப் பாடியதன் மூலமும், பல்வேறு சமூகங்களுடனும் கலை ரீதியிலான பிணைப்புகளைக் கட்டியெழுப்பியதன் மூலமும் அவர் சகவாழ்வையும் பரஸ்பர பரிவையும் பலப்படுத்திய ஒரு கலைஞராவார் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
விழாவில் மேலும் உரையாற்றிய பிரதமர், ஜூலை மாதமானது நாட்டின் கடந்தகாலத்தின் பல இருண்ட நினைவுகளுடன் பிணைக்கப்பட்டுள்ள ஒரு மாதமாகும் என்பதை நினைவூட்டியதோடு, அந்தத் துன்பகரமான நினைவுகள் எதிர்கால சந்ததியினரின் மனங்களில் குரோத உணர்வுகளாக இருப்பதற்குப் பதிலாக, நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் கட்டியெழுப்பும் நினைவுகளை அவர்களின் மனங்களில் விட்டுச்செல்ல நாம் முயற்சிக்க வேண்டும் எனக் கூறியதோடு, "கறுப்பு ஜூலை" என்ற அறிமுகத்திற்கு அப்பால் சென்று, ஜூலை மாதத்தை அனைத்து இலங்கையர்களையும் ஒருவரையொருவர் நெருக்கமாக நேசிக்கும் சகோதரத்துவத்தின் மாதமாக மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,
"நமது கலையும் கலாசாரமும் ஒருபோதும் ஒரு தனிப்பட்ட இனத்தின் அல்லது ஒரு தனிப்பட்ட மக்கள் பிரிவின் உருவாக்கம் அல்ல. இந்த நாட்டின் பல்வேறு இனங்கள், மொழிகள் மற்றும் கலாசார மரபுகள் ஒன்று கலந்தே நமது தேசிய அடையாளம் கட்டியெழுப்பப்பட்டிருக்கின்றது. நமது பாடல் இதயங்களுக்கு நெருக்கமானதும், நமது சினிமா உலகத்தால் அடையாளம் காணப்பட்ட கலை ஊடகமாக மாறியதும், நடனம் உள்ளிட்ட அனைத்துக் கலை அம்சங்களும் ஈடு இணையற்ற அழகோடு மிளிர்ந்ததும் அந்தப் பன்மைத்துவத்தினாலேயே ஆகும். காலத்தால் அழியாத விலைமதிப்பற்ற படைப்புகள் பிளவுபட்டுப் பிரியும்போது உருவாவதில்லை, ஒருவரையொருவர் கரம்கோர்த்து, வேறுபாடுகளை மதித்து முன்னெடுத்துச் செல்லும்போது உருவாகின்றன. எனவே, நமது நாட்டின் எதிர்காலத்தினைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின், அனைவரும் ஒன்றிணைந்து, சகோதரத்துவத்துடனும், ஒத்துழைப்புடனும், பரஸ்பர மரியாதையுடனும் முன்னோக்கிச் சென்றால் மாத்திரமே அது சாத்தியமாகும். அந்த உண்மையை கலாநிதி சுஜாதா அத்தநாயக்க போன்ற அதிதிறமை வாய்ந்த கலைஞர்கள் தங்களது வாழ்க்கையின் மூலம், தங்களது கலையின் மூலம், அதேபோன்று தங்களது மனிதநேயப் பிணைப்பின் மூலம் நமக்குத் தெளிவாக எடுத்துக்காட்டியிருக்கின்றார்கள்" என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி, ஊடகப் பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா அரியரத்ன, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பேராசிரியர் உதித கயாஷான் குணசேகர, கலாநிதி ரத்ன ஸ்ரீ விஜேசிங்க, மூத்த கலைஞர் நவரத்ன அத்தநாயக்க உள்ளிட்ட பல முக்கிய விருந்தினர்கள் கலந்துகொண்டனர்.