பறவைகள் சரணாலய உரிமையாளர் கைது!
இலங்கைக்குள் ஆடம்பர மோட்டார் சைக்கிள்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்த வழக்கில் ஹம்பாந்தோட்டை பறவைகள் சரணாலயத்தின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் பல நாட்களாக அதிகாரிகளால் கைது செய்யப்படுவதை தவிரத்து, தலைமறைவாக இருந்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நிலையில், அவர் இன்று (17) கொழும்பில் கைது செய்யப்பட்டு தற்போது மருதானை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, ஹம்பாந்தோட்டை, நகர வேவா பறவைகள் சரணாயலத்தில் உள்ள ஒரு கிடங்கில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 21 ஆடம்பர மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் பறிமுதல் செய்திருந்தனர்.
பதில் பொலிஸ்மா அதிபருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு இந்த சோதனையை நடத்தியது.
பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் பெறுமதி ரூ. 200 மில்லியனுக்கும் அதிகமாகும்.
இந்த சம்பவம் தொடர்பில் முன்னதாக, பூங்காவின் முகாமையாளர் மற்றும் கிடங்கு மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டு ஜூலை 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.