
ட்ரம்புடன் பேச்சுவார்த்தை.
உக்ரைன் போர் தொடர்பில் டொனால்ட் ட்ரம்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட இருப்பதை வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் உடன் தொலைபேசியில் புடின் பகிர்ந்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்த வாரம் அலாஸ்காவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் உக்ரைன் போர் தொடர்பில் சந்திப்பு ஒன்றை முன்னெடுக்க உள்ளார். |
இந்த நிலையிலேயே வடகொரியாவின் கிம் ஜோங் உடன் விளாடிமிர் புடின் தொலைபேசியில் தொடர்புகொண்டு பகிர்ந்து கொண்டுள்ளார் என ரஷ்ய ஜனாதிபதி மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. ஆனால் வெள்ளிக்கிழமை சந்திப்பு நடப்பதாக கிம்மிடம் குறிப்பிடவில்லை என்றே கூறப்படுகிறது. கடந்த ஆண்டு வடகொரியா மற்றும் ரஷ்யா இடையே முன்னெடுக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பில் இரு தலைவர்களும் விவாதித்துள்ளனர். எதிர்காலத்திலும் தங்களின் பரஸ்பர ஒத்துழைப்பு தொடரும் என இருவரும் உறுதி செய்துள்ளனர். உக்ரைனுக்கு எதிரான போரில் மேற்கு ரஷ்யாவில் உள்ள குர்ஸ்க் பகுதியை விடுவிப்பதில் வட கொரியாவின் உதவிக்கு புடின் நன்றி தெரிவித்தார். கொரிய மக்கள் இராணுவத்தின் வீரர்களால் வெளிப்படுத்தப்பட்ட துணிச்சல், வீரம் மற்றும் சுய தியாக மனப்பான்மை பாராட்டுதலுக்கு உரியது என புடின் பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. உக்ரைன் போரில் மேற்கு ரஷ்யாவில் ரஷ்யாவின் தாக்குதலுக்கு உதவ வட கொரியா 10,000 க்கும் மேற்பட்ட துருப்புக்களை அனுப்பியது. மீண்டும் பல ஆயிரம் வீரர்களை ரஷ்யாவிற்கு அனுப்ப வடகொரியா திட்டமிட்டு வருவதாக தென் கொரிய உளவுத்துறை தெரிவித்துள்ளது. |