லண்டனின் “இந்தியன் அரோமா” உணவகத்திற்கு தீ வைப்பு!

25.08.2025 07:58:09

லண்டனில் உள்ள “இந்தியன் அரோமா” உணவகத்தில் நடந்த தீ வைப்பு சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் லண்டனின் இல்பர்ட் பகுதியில் வுட்போர்ட் அவென்யூவில் அமைந்துள்ள இந்தியன் அரோமா என்ற உணவகத்தில் மர்ம நபர்கள் தீ வைப்பு தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 5 பேர் வரை காயமடைந்த நிலையில், 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தீ வைப்பு தாக்குதலை தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்திய பொலிஸார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது, முகமூடி அணிந்த சில மர்ம நபர்கள் உணவகத்திற்குள் நுழைந்து திரவம் ஒன்றை தரையில் ஊற்றியது தெரியவருகிறது.

இதனையடுத்து உடனடியாக உணவகத்தின் உட்புறத்தில் தீப்பற்றி எரிவதும், பயங்கர நிகழ்வாக மாறுவதும் அதில் பதிவாகியுள்ளது. தீவிர விசாரணையின் இறுதியில், 54 வயதுடைய ஆண் ஒருவரும், 15 வயது சிறுவனும் இந்த சம்பவத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக பொலிஸார் வழங்கிய தகவலில், நாங்கள் இருவரை கைது செய்துள்ளோம். இருப்பினும் இந்தியன் அரோமா உணவகத்தில் நடந்த சம்பவம் குறித்து முழுமையான கண்டறிதலை உறுதிப்படுத்துவதற்காக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.