டிரோன் பறக்க தடை...!

10.11.2022 07:50:00

திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் கலந்து கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் 2018, 2019 ஆண்டுகள் மற்றும் 2019 -2020 ஆம் கல்வி ஆண்டில் பயின்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்குகிறார். இதற்காக பல்கலைக்கழக வளாகத்தில் 300 நபர்கள் அமர கூடிய வளாகத்திற்கான ஏற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பட்டமளிப்பு விழாவுக்காக பிரதமர் மோடி தனி விமானத்தில் நாளை மதுரை வருகிறார். பிரதமர் வருகையையொட்டி மதுரை விமான நிலையத்தில் நேற்று முதல் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலைய ஓடுபாதை, கண்காணிப்பு கோபுரம், விமான நிலைய உள்வளாகம் ஆகிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற உள்ள பல்நோக்கு அரங்கம் பிரம்மாண்டமாக நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். தற்போது காந்த கிராமிய பல்கலைக்கழக வளாகப் பகுதியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். பல்கலைக்கழக வளாகத்திற்குள் கல்லூரி மாணவ-மாணவியர் பேராசிரியர்கள் பல்கலைக்கழக பணியாளர்கள் உட்பட அனைவரும் தீவிரமாக சோதனை செய்யப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், விமான நிலையம் சுற்றியுள்ள கிராமங்களில் வானவெடிக்கைகள் வெடிக்கக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல சின்னாளப்பட்டி, காந்திகிராமம், அம்பாத்துரை, அம்மைநாயக்கனூர், செம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் டிரோன்கள் பறக்கவும் தடைவிதித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.