நாட்டின் உரிமையாளர் போல ஜனாதிபதி நடந்து கொள்ள முடியாது!

28.08.2026 09:00:00

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை. அவர் இந்த நாட்டின் உரிமையாளர் அல்ல, மாறாக மக்களின் பிரதிநிதி மாத்திரமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.

  

வியாழக்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டறிந்த பின்னரே கொண்டுவரப்பட்டதாக ஜனாதிபதி கூறுவது உண்மைக்கு புறம்பானது. நாட்டின் நீதியரசர்கள், நீதிச் சேவை ஆணைக்குழு, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், பாராளுமன்றத்தின் சட்டம் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு மற்றும் இலங்கை சட்ட ஆணைக்குழு என எந்தவொரு முக்கிய தரப்பினருடனும் ஜனாதிபதி இது குறித்து எவ்வித கலந்தாலோசனையையும் நடத்தவில்லை.

மேலும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இது குறித்துக் கலந்துரையாட ஏப்ரல் மாதத்திலேயே நேரம் கோரியிருந்த போதிலும், அமைச்சரவை ஒப்புதல் பெற்று வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட பின்னரே அவர்களுக்குச் சந்திப்பு வாய்ப்பளிக்கப்பட்டது. தான் கூறுவது தவறு என்றால், எந்தெந்த நாட்களில் எந்தெந்தத் தரப்பினருடன் ஆலோசனை நடத்தப்பட்டது என்ற விபரங்களை உடனடியாக வெளியிடுமாறு ஜனாதிபதிக்கு சவால் விடுக்கின்றோம்.

ஜனாதிபதி திறந்த மனதுடன் செயற்படாமல் தன்னிச்சையாக எடுத்துள்ள இத்தீர்மானத்தின் விளைவை இறுதியில் முழு நாடும் அனுபவிக்க நேரிடும். 5 வருட காலத்துக்கு மக்கள் வழங்கிய ஆணையின்படி ஒரு மக்களின் பிரதிநிதியாக மட்டுமே ஜனாதிபதி செயற்பட முடியுமே தவிர, நாட்டின் உரிமையாளரைப் போலச் செயற்பட முடியாது என்றார்.