முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விவகாரம்

14.05.2022 15:50:10

முள்ளிவாய்க்காலில் இடம்பெறவுள்ள நினைவேந்தல் மற்றும் பிரார்த்தனை நிகழ்வுகளில் தலையிடாதிருப்பதற்கான பணிப்புகளை முல்லைத்தீவு காவல்துறையினருக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமருக்கு வடக்கு மாகாண அவைத் தலைவர் நேற்று அனுப்பிய கடிதத்திலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 18 ஆம் நாளில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்காலில் ஆயுதப் படையினரால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை கூட்டாக நினைவு கூர்ந்து அஞ்சலி செய்வது தாங்கள் நன்றாக அறிந்ததே.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விவகாரம் - ரணிலுக்கு அவசர கடிதம்

இந்துக்கள் மற்றும் பௌத்தர்கள் என்ற வகையில் வன்முறையால் கொல்லப்பட்ட ஆன்மாக்களின் சாபம் பற்றி நாம் அறிவோம். இந்த நாட்டை இந்த ஆன்மாக்களின் சாபம் சுற்றி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவது தெளிவானது.

கர்மவினையின் தாக்கங்களே இந்த நாட்டை தாக்குகின்றது என்பதும் தெளிவு. இந்த ஆன்மாக்களை நினைவு கூர்ந்து பிரார்த்தனை செய்வதால் அவை அமைதி பெறுகின்றன என்பது எமது சமய நம்பிக்கையாகும்.

இறுதியாக படுகொலை இடம்பெற்ற முள்ளிவாய்க்காலில், மேற்குறிப்பிட்டவாறு மரணித்த ஆன்மாக்களுக்கு அமைதியான முறையில் 18 ஆம் திகதி அஞ்சலி மற்றும் பிரார்த்தனை செய்ய தமிழ் மக்கள் மிகவும் தீர்மானமாக உள்ளனர்.

எனினும், முல்லைத்தீவு காவல்துறையினர் இதனை தடை செய்வதற்கு ஏற்கனவே நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை கவலைக்குரியது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விவகாரம் - ரணிலுக்கு அவசர கடிதம்

இது மிகவும் துரதிஷ்டவசமானதும், எமது அடிப்படை சமய மற்றும் சமூக உரிமைகளை மறுக்கும் செயலாகும்.

ஆகவே, இந்த விடயத்தில் தாங்கள் தலையிட்டு, 18 ஆம் திகதி புதன்கிழமை முள்ளிவாய்க்காலில் இடம்பெறவுள்ள நினைவஞ்சலி மற்றும் பிரர்த்தனை நிகழ்வுகளில் காவல்துறையினர் தலையிடாதிருப்பதற்கான பணிப்புகளை முல்லைத்தீவு காவல்துறையினருக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துதவுமாறு வேண்டுகின்றோம்” என்றுள்ளது.