தமிழ் மக்கள் ஏமாந்துவிடக் கூடாது!

24.08.2026 15:14:50

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வடக்கு, கிழக்கில் இருக்கின்ற தமிழர்களுக்கு ஏதோ நல்லது செய்வதாக காட்டிக்கொண்டு தன் பக்கம் ஈர்க்கும் செயற்பாட்டை செய்து வருகின்றார். எனவே தமிழ் மக்கள் ஏமாந்துவிடக் கூடாது. வரப்போகும் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு தொடர்பான பொதுசன வாக்கெடுப்புக்கு எதிராக அனைத்து அரசியல் தலைவர்களும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் தெரிவித்தார்.

  

தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மக்கள் சந்திப்பு மட்டக்களப்பு துறைநீலாவணை பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) மாலை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் உரையாற்றுகையில், அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிட்ட அவர்,

பட்டிருப்பு தொகுதி என்றால் அது தமிழ்த் தொகுதி. இங்கு தேசிய கட்சிகளோ மாற்றுக் கட்சிகளோ ஆசனங்களை பெறமுடியாது.

துறைநீலாவணை, கல்லாறு, பட்டிருப்பு தமிழ் தேசிய உணர்வுடன் தமிழ் என்ற ஒரு திமிருடன் இருக்கின்றோம் என்ற மக்கள் வாழும் பகுதி. அதனடிப்படையில் இந்த சந்தர்ப்பங்களை பாவித்து அந்த வாக்குகளை சூறையாடி தங்களுடைய சுய இலாபங்களுக்காக அந்த வாக்குகள் பயன்படுத்தப்படுகின்றன.

தேர்தல் காலங்களில் இங்கு வந்து போராடினோம். மாவீரர்களை இழந்திருக்கிறோம் என கூறி எங்கள் மக்களை நம்ப வைத்து வாக்குகளை பெற்றுக்கொண்டு நாடாளுமன்றம், பிரதேச சபை பிரதிநிதித்துவத்தை பெற்று அதிகாரங்கள் கைக்கு கிடைத்த பின்னர் அந்த மக்களின் குறைகளை கேட்டறிவதற்கு யாரும் வருவதில்லை.

இதுதான் இன்று வடக்கு, கிழக்கில் இருக்கின்ற ஒரு துர்ப்பாக்கியமான நிலை. தமிழர்கள் நம்பி வாக்களித்த தமிழருக்கு பொறுப்பாக இருக்கும் இந்த மண்ணில் உள்ள தரப்புக்கள் தமிழர்களது விவகாரங்களை கையாளாமல், தங்களின் சொந்த நலனுக்காக அரசினுடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் தங்களை முழுமையாக அர்ப்பணிக்கின்றார்களே ஒழிய, எமது மக்களின் தியாகங்களை நிறைவேற்றுவதற்கு எந்தவொரு தரப்பும் கிழக்கில் இல்லை.

இந்த மண்ணில் 76 வருடங்களாக ஒரு மிகப் பெரிய இன அடக்குமுறைக்குள் இருக்கின்றோம். சிங்கள பேரினவாதம் எங்களை அடக்கி ஒடுக்குகிறது. ஒவ்வொரு தலைவரும் இந்த நாட்டை ஆட்சி செய்ய வருகின்றனர். இவர்கள் ஒவ்வொருவரும் உரிமை தருகின்றோம், பூனையை யானை ஆக்குவோம் என்று சொல்லிக்கொண்டு, மாறாக தமிழர்களுடைய இருப்பை இல்லாமல் செய்வதற்கான புதிய புதிய சட்டங்களை இயற்றி தமிழர்களை அடக்கி ஒடுக்கி வந்ததுதான் வரலாறு.

இதனைத்தான் இந்த புதிய அரசும் செய்கிறது. உலகத்துக்கு சுபீட்சமாக இருப்பதாகக் காட்டிக்கொண்டு தமிழர்களை தொடர்ச்சியாக வடக்கு, கிழக்கில் மிக கச்சிதமாக எம் இனத்தவர்களையே வாங்கி வெற்றி கண்டுள்ள தோற்றப்பாடு தெரிகிறது.

உண்மையில் புதுப் புது சட்டங்கள் என்பது எமது மக்கள் ஜனநாயக ரீதியாக கருத்துக்களை பேச முடியாத அளவிற்கு ஊடகத்துறை மற்றும் மக்களின் கருத்துக்களை வெளிப்படுத்தும் நிறுவனங்களை அடக்குவதற்காக இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இதன் நோக்கம் இது சிங்கள பௌத்த நாடு என்ற சிங்கள பேரினவாதத்தின் அடிப்படை சிந்தனையாக இருக்கின்றது.

தமிழர்கள் ஒரு தேசிய இனம். இந்த இனத்தின் தனித்துவம் பேணப்படக்கூடாது என்பதற்காக புதுப் புது திணைக்களங்களை உருவாக்கி தமிழர்களின் காணிகளை அபகரித்து வருகின்றனர்.

தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதியில் ஏன் புத்த விகாரை என்றால், தமிழர்களை இன அழிப்பு செய்து பௌத்த நாடாக்குவதே திட்டம். இதன் உள்நோக்கம் விகாரைகள் அமைத்தல் ஆகும்.

இந்த திட்டத்துக்கு தங்களுக்கு விசுவாசமானவர்களை இந்த தமிழ் அரசியல் அரங்கில் வைத்துக்கொள்வதற்காக வருகின்ற அரசுகள் தெளிவாக கையாளுகின்றன.

இந்த ஒற்றையாட்சியை எதிர்த்து தமிழ் மக்கள் இறையான்மையுடன் சுயநிர்ணய உரிமையுடன் வாழ வேண்டும் என்பற்காகத்தான் இவ்வளவு காலமும் இந்த போராட்டம் இடம்பெற்றது. எனவே இந்த இன அழிப்பில் இருந்து மீள வேண்டுமானால், வடக்கு, கிழக்கில் உள்ள மக்கள் அனைவரும் ஒரு சரியான தலைமைத்துவத்தின் கீழ் இந்த விடயங்களை கையாளவேண்டும்.

எங்கெங்கு பேரம் பேசவேண்டுமோ, அந்த சரியான தலைமைத்துத்தின் ஊடாக பேரம் பேச வேண்டும். தமிழ் மக்களுக்கான உரிமையை இழந்திருக்கின்றோம். இனி இழப்பதற்கு எதுவும் இல்லை. ஆகவே எங்களுடைய மக்களின் தியாகங்களுக்கு அரசியல் உரிமையை பெற்றுக்கொடுப்பதுதான் ஒரே ஒரு வேலை. அந்த தீர்வு வெளிப்படையாக இருக்கவேண்டும்.

இந்த நாட்டை ஆளுகின்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தன்னுடைய நுட்பத்தின் ஊடாக வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழர்களுக்கு ஏதோ நல்லது செய்வதாக காட்டிக்கொண்டு தன் பக்கம் ஈர்க்கும் நிலைப்பாடு காணப்படுகின்றது. நீங்கள் ஏமாந்துவிடக் கூடாது. 2029 தேர்தல் வரப் போகிறது. இந்த தேர்தலுக்கு முதல் இந்த நாட்டின் ஜனாதிபதி உலகத்துக்கு இங்கு தமிழர்களுக்கு நல்ல விடயம் நடப்பதாக காட்டவேண்டும். அதற்காக அவர்கள் தமிழ் மக்களின் விருப்பத்துடன் அரசியலமைப்பை கொண்டுவர முயற்சி நடந்துகொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தமிழ் தேசியத்துடன் இருக்கும் 11 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருக்கின்றனர். எனவே நாங்கள் தெரிவு செய்தவர்களுடன் அந்த அரசியல் அமைப்பு நிறைவேற்றப்பட்டுவிடக் கூடாது என்பதுடன் ஒற்றையாட்சி அரசியலமைப்பு தொடர்பாக பொதுசன வாக்கெடுப்பின்போது அனைத்து தமிழ் மக்களும் இதற்கு தயார் இல்லை என்ற எதிர்ப்பை காட்டவேண்டும்.