2,371.83 மில்லியன் ரூபாவை கொடையாக வழங்குகிறது இந்தியா!

29.10.2025 14:45:00

இந்தியாவின் பல்துறைசார் அனுசரணையின் கீழ் கிழக்கு மாகாணத்தில் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக இந்திய - இலங்கை அரசுகளுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கடந்த ஏப்ரல் 5ஆம் திகதி கையொப்பமிடப்பட்டுள்ளது.

அதன்கீழ் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தித் தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற 33 கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக 2,371.83 மில்லியன் இலங்கை ரூபாய்களை நன்கொடையாக வழங்குவதற்கு இந்திய அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது.

குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கமைய, அமுல்படுத்துவதற்குள்ள ஒவ்வொரு கருத்திட்டத்திற்கும் இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சுக்கும் இடையில் வேறுவேறாக புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிடப்பட வேண்டியுள்ளளது.

அதற்கிணங்க, இந்தியாவின் பல்துறைசார் நன்கொடையின் கீழ் கிழக்கு மாகாணத்தில் அமுல்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள 33 கருத்திட்டங்களுக்கான 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், இந்திய உயர் ஸ்தானிகர் மற்றும் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளருக்கும் இடையில் கையொப்பமிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.