பறவை காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவலாம்- சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை
பறவை காய்ச்சல் கிருமி பறவைகள் மூலமாக மனிதர்களுக்கும் பரவும் தன்மை கொண்டது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
வடமாநிலங்கள் சிலவற்றிலும், கேரளா மாநிலத்திலும் பறவை காய்ச்சல் பரவி வருவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் நோய் பரவி இருப்பதால் அது எளிதாக தமிழகத்திற்கு பரவி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கேரளாவில் இருந்து முட்டை, கோழிகள் மற்றும் இறைச்சி பொருட்கள் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எல்லைபுறங்களில் கண்காணிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பறவை காய்ச்சல் தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்தி விடாமல் இருப்பதற்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறோம்.
வெளி மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் பொருட்கள் கண்காணிக்கப்படுகின்றன.
பறவை காய்ச்சல் கிருமி பறவைகள் மூலமாக மனிதர்களுக்கும் பரவும் தன்மை கொண்டது. இதனால் மனிதர்களுக்கும் இது பரவலாம்.
எனவே அவ்வாறு நிகழ்ந்து விடாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நோய் தொற்று ஏற்படாமல் இருக்க எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
புதிய கொரோனா தொற்று பரவலை தடுக்கவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிண்டி ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலில் கொரோனா பரவியதையடுத்து அனைவருக்கும் சோதனை நடத்தப்பட்டது. மற்ற இடங்களிலும் சோதனைகள் மேற் கொள்ளப்பட்டது. அதில் நோய் தொற்று கண்டறியப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.