மீளப்பெறப்பட்ட மாவீரர் தின தடை உத்தரவு - நீதிமன்றில் தீர்ப்பு

26.11.2022 09:49:23

மன்னாரில் மாவீரர் தினத்தை நினைவு கூறுவதற்கு எதிராக அடம்பன் காவல்துறையினரால் பெறப்பட்ட இடைக்கால தடை உத்தரவு மீள்பெறபட்டுள்ளது.

நேற்று முன்தினம் (24) மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இடைக்கால தடை ஒன்றை பெற்ற நிலையில் நேற்றைய தினம் (25) குறித்த வழக்கை அடம்பன் காவல்துறையினர்  மீளப்பெற்றுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக சட்டத்தரணி செல்வராஜ் டினேசன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கம்போதே இதனை தெரிவித்திருந்தார்.

தடை உத்தரவு

அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழர் தாயக பகுதிகளில் உள்ள மாவீரர்களுடைய கல்லறைகள் புதுப்பிக்கப்பட்டு அங்கே திருத்த வேலைகள் இடம் பெற்று வந்ததோடு மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டிவெளி துயிலும் இல்ல திருத்தப்பணிகளும்  முன்னெடுக்கப்பட்டு வந்தது.

மாவீரர் தினத்தை எதிர்வரும் தினங்களில் மன்னார் பிரதேச மக்கள் நினைவேந்தலை முன்னெடுக்க இருப்பதாகவும் மாவீரர் தினத்தின் போது மீண்டும் ஒரு இனக்கலவரம் மற்றும் இனங்களுக்கிடையிலான முரண்பாடு இடம் பெறலாம் என்றும் எனவே அதற்கு தடை உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு அடம்பன் காவல்துறையினரால் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விண்ணப்பம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குற்றவியல் நடைமுறை சட்டக்கோவை இன் பிரிவு 106 பிரகாரம் குறித்த வழக்கை ஏற்ற மன்னார் நீதவான் மாவீரர் தினத்தை முன்னெடுக்க 24 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை மன்னார் நகர சபையின் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன்,பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் உற்பட 6 நபர்களின் பெயரை குறிப்பிட்டு இடைக்கால தடை ஒன்றை வழங்கியிருந்தார்.

மீளப்பெறல்

மன்னார் மாவட்ட காவல்துறை அத்தியட்சகர் மற்றும் அடம்பன் காவல்நிலைய பொறுப்பதிகாரி இணைந்து நகர்த்தல் பத்திரம் ஊடாக குறித்த வழக்கை மீண்டும் நீதிமன்றத்திற்கு கொண்டு வந்து குறித்த வழக்கை மீளப்பெறுவதாக தெரிவித்ததன் மூலம் மாவீரர் தினத்தை நினைவு கூறுவதற்காக வழங்கப்பட்ட தற்காலிக தடை உத்தரவு தளர்த்த பட்டுள்ளது” என டினேசன் தெரிவித்துள்ளார்.

அதே நேரம் குறித்த வழக்கின் இறுதி அறிக்கைக்காக  இம்மாதம் 30ம் திகதி தவணை இடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.