மேற்கிந்திய தீவுகள் அணியை ஒருநாள் தொடரில் வயிட் வோஷ் செய்தது

28.07.2022 16:19:19

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியிலும், இந்தியக் கிரிக்கெட் அணி டக்வத் லுயிஸ் முறைப்படி 119 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில், இந்தியக் கிரிக்கெட் அணி முழுமையாக வென்றது.

ட்ரினிடெட் மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட இந்திய அணி களமிறங்கிய போது, போட்டியின் இடைநடுவே மழைக் குறுக்கிட்டது. இதனால் போட்டி 36 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.

இதற்கமைய இந்தியக் கிரிக்கெட்; அணி 36 ஓவர்கள் நிறைவில், 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 225 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சுப்மான் கில் ஆட்டமிழக்காது 98 ஓட்டங்களையும் தவான் 58 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டார்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், ஹெய்டன் வோல்ஷ் 2 விக்கெட்டுகளையும் அகீல் ஹொசைன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 226 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 26 ஓவர்கள் நிறைவில் 137 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், இந்தியக் கிரிக்கெட் அணி டக்வத் லுயிஸ் முறைப்படி 119 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பிரெண்டன் கிங் மற்றும் நிக்கோலஸ் பூரான் ஆகியோர் தலா 42 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், யுஸ்வேந்திர சஹால் 4 விக்கெட்டுகளையும் மொஹமட் சிராஜ் மற்றும் சர்துல் தாகூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் அக்ஸர் பட்டேல் மற்றும் பிரசீத் கிருஸ்ணா ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாகவும் தொடரின் நாயகனாகவும் இந்தியக் கிரிக்கெட் அணியின் சுப்மான் கில் தெரிவுசெய்யப்பட்டார்.