இந்திய கடற்படையில் ஸ்கார்ப்பீன்’ வகை நீர்மூழ்கி கப்பல் இணைக்கப்பட்டது !
கடல் பிராந்திய சவால்களை எதிர்கொள்ளும் விதமாக இந்திய கடற்படையில், இரகசியமாக செயல்படும் ‘ஸ்கார்ப்பீன்’ வகை நீர்மூழ்கியான ஐ.என்.எஸ். கராஞ்ச் கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது.
இதற்கான தொடக்க நிகழ்ச்சி மும்பையில் உள்ள கடற்படை கப்பல்துறையில் நேற்று நடைபெற்றது.
இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ள 3-வது ஸ்கார்ப்பீன் வகை நீழ்மூழ்கி கப்பலான இந்த கப்பல் கடற்படையின் மேற்கு பிரிவில் சேர்க்கப்படுகிறது.
அதிநவீன வசதிகள் தாக்குதல் திறன் கொண்ட இந்த நீர்மூழ்கி கப்பலை அரசுக்கு சொந்தமான மும்பை மஸகோன் கப்பல் கட்டுமான நிறுவனம் பிரான்ஸ் நாட்டின் கடற்படை குழுமத்துடன் இணைந்து உருவாக்கியுள்ளது. இதுபோன்ற 6 நீர்மூழ்கி கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன.
ஐ.என்.எஸ்.கராஞ்ச் தன்னிறைவு இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டிருப்பது பெருமைக்குரியது என்று தொடக்க நிகழ்வில் பேசிய கடற்படை தலைமை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் கூறியுள்ளார்.