மூன்று பிரச்சினைகளுக்காகவே ஒன்றிணைந்துள்ளோம்!

22.07.2026 14:56:49

இந்த நாட்டில் தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு கொள்கை அடிப்படையில் ஒன்றிணைந்துள்ளோம். எமது முயற்சியை தவறான கண்ணோட்டத்தில் அரசாங்கத்துக்கு சார்பானவர்களே பார்க்கிறார்கள். போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். எமது புதிய ஒன்றிணைவு தமிழ் பேசும் மக்களுக்கு பயனுடையதாகவே அமையும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

   

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற கோப் குழு அறிக்கைகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கோப் குழுவினால் அடையாளப்படுத்தப்பட்ட விடயங்களை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவுக்கோ அல்லது பொலிஸ் மா அதிபருக்கோ அறிவிப்பது எமக்கு பிரச்சினையல்ல. ஆனால், கோப் குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதற்கு அப்பாற்பட்டு, அவற்றை விவாதம் செய்து நபரை குற்றவாளியாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் பலர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள். இந்த விவாதத்தின் ஊடாக அரச அதிகாரிகள் பலர் குற்றவாளிகளாக்கப்பட்டுள்ளார்கள். எந்த அடிப்படையில் கோப் குழு ஒருசில விடயங்களை தெரிவு செய்துள்ளது.

கடந்த பாராளுமன்றத்தில் கோப் குழு உறுப்பினராக அங்கம் வகித்தேன். இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கியின் நிலுவை கடன் விபரங்களை நானே வெளிப்படுத்தினேன். ஆனால் தற்போதைய நிலையில் மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி மற்றும் இலங்கை வங்கி தொடர்பில் ஏதும் குறிப்பிடப்படவில்லை.

இந்த நிலுவை கடன்கள் ஊடாக பல கோடி ரூபா நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த விடயம் பற்றி அடுத்தகட்ட விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கம் அவதானம் செலுத்தவில்லை. இது அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதா என்ற சந்தேகம் காணப்படுகிறது.

கடந்த கோப் குழுவின் தலைவர் குழுவில் முன்னிலையாகும் அரச அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்தார். தற்போதைய குழு அவ்வாறு செயற்படும் என்று குற்றஞ்சாட்டப் போவதுமில்லை. சான்றழிக்கப் போவதுமில்லை. கோப் குழுவின் அறிக்கை தொடர்பான விபரங்கள் மற்றும் அரச நிறுவனங்கள் பற்றி சபையில் விவாதிப்பது முற்றிலும் தவறானது.

ஒருசில மோசடிகள் தொடர்பில் தற்போது முறையான விசாரணைகள் இடம்பெறுகிறதா என்பது சந்தேகத்துக்குரியது. மதுபானசாலைகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் இலஞ்சமாகவே வழங்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி பலமுறை குறிப்பிட்டார். இது குறித்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

கோப் குழு அறிக்கையை பிறிதொரு அரச தரப்புக்கு வழங்குவதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் விடயங்களை பாராளுமன்றத்தில் விவாதிப்பதால் ஒருசில அரச அதிகாரிகளின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படலாம். தவறிழைக்காத அரச அதிகாரிகளும் இருக்க முடியும். ஆகவே இவ்விடயத்தில் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

பிரதான மூன்று விடயங்களை முன்னிலைப்படுத்தியே தமிழ் பேசும் அரசியல் கட்சிகளாகிய நாங்கள் ஒன்றிணைந்து செயற்படுகிறோம்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம், மாகாண சபைகள் தேர்தல் மற்றும் காணி பிரச்சினை ஆகிய மூன்று பிரதான பிரச்சினைகளுக்காக ஒன்றிணைந்துள்ளோம். இந்த ஒன்றிணைவு தொடர்பில் பல போலியான விடயங்கள் பல கோணத்தில் முன்வைக்கப்படுகிறது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வேண்டும் என்பதில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி உறுதியாக உள்ளது. எமது முயற்சியை தவறான கண்ணோட்டத்தில் அரசாங்கத்துக்கு சார்பானவர்களே பார்க்கிறார்கள். போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். எமது புதிய ஒன்றிணைவு தமிழ் பேசும் மக்களுக்கு பயனுடையதாகவே அமையும்.