இரவு வரை நடந்த சட்டப்பேரவை.

04.09.2026 08:51:35

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று இரவு வரை நடைபெற்றது. இரவு 7 மணியை கடந்து சட்டப்பேரவை நடைபெற்றபோது, அதிமுக எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம் அசதியில் தனது இருக்கையிலேயே சாய்ந்து தூங்கினார். தமிழக சட்டசபையில் இன்று காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக சட்டமன்ற தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து பேசியதால் அவையில் அனல் பறந்தது.

 

முதலமைச்சர் விஜய் இன்று பாதியிலேயே அவையில் இருந்து கிளம்பிய நிலையில், தொடர்ந்து சட்டப்பேரவை நிகழ்வுகள் நடைபெற்றன. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். தொடர்ந்து, இரவு வரை சட்டமன்றம் நடைபெற்றது. அதிமுக எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம் பேசுகையில், "தொகுதி சார்ந்த கேள்விகளுக்கு அமைச்சர்களிடம் இருந்து பதில் வருகிறது அதில் மகிழ்ச்சி. ஆனால் பேரவை 12 மணி வரை நடக்குமோ என்று அச்சமாக உள்ளது." என்றார்.

அதற்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், "12 மணி வரை எல்லாம் பேரவை நடக்காது.. பயப்பட வேண்டாம்" என சிரித்துக்கொண்டே தெரிவித்தார். இரவு 7 மணியை கடந்து சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றபோது, அதிமுக எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம் அசதியில் தனது இருக்கையிலேயே சாய்ந்து தூங்கினார். தொடர்ந்து, சிறிது நேரத்தில் சட்டசபை கூட்டத்தொடரின் இன்றைய அலுவல்கள் முடிவடைந்தன.

கிருஷ்ண ஜெயந்தி என்பதால் அரசு விடுமுறை நாள். தொடர்ந்து, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வருவதால் அன்றைய நாட்களும் சட்டசபைக்கு விடுமுறை. இவ்வாறு 3 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை விடப்படுகிறது. அடுத்து, வரும் திங்கட்கிழமை (7 ஆம்தேதி) சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது. அன்றைய தினம், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் பதில் அளிக்க இருக்கிறார். முன்னதாக, துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை அவர் இன்றே வெளியிட்டுவிட்டார்.