மட்டக்களப்பில் ஆலயங்கள், தமிழ் கட்சி காரியாலயங்களுக்கு பாதுகாப்பு!

26.09.2021 12:46:17

தியாகதீபம் திலீபனின் 34 ஆண்டு நினைவேந்தல் தினத்தையிட்டு மட்டக்களப்பில்  சில ஆலயங்கள் தமிழ் அரசியல் கட்சிகளின் காரியாலயங்கள் மற்றும் பிரமுகர்களின் வீடுகளுக்கு முன்னால் காவல்துறையினர் மற்றும் அரச புலனாய்வு பிரிவினர் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) காலையில் இருந்து பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 1987 ம் ஆண்டு செட்டெம்பர் மாதம் 15 ம் திகதி தொடக்கம் 26 ம் திகதிவரை உண்ணாவிரம் இருந்து உயிர்நீத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினரான தியாக தீபம் தீலீபனின் 34 வது ஆண்டு தினம் கடந்த 15ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இதனையடுத்து மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினர், கரடியனாறு, காத்தான்குடி, வெல்லாவெளி, வாழைச்சேனை. போன்ற காவல் நிலையங்களினால் முன்னாள் இன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் மட்டு மாநகரசபை மேஜர், தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர். உப்பட தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள பெயர்குறிப்பிட்டு இவர்கள் திலீபனின் நினைவேந்தல் செய்ய ஏற்பாடுகள் செய்துள்ளதாகவும் இவர்களுக்கு எதிராக நீதிமன்ற தடை உத்தரவை காவல்துறையினர் பெற்று உரியவர்களிடம் வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை 26 ம் திகதி திலீபனின் இறுதி நினைவேந்தல் தினமாகும் இதன்போது ஆலயங்களிலே  கட்சி காரியாலயங்களிலே அல்லது தமிழ் அரசியல் வாதிகள் முக்கிய பிரமுகர்கள் வீடுகளில் இந்த நீதிமன்ற தடை உத்தரவை மீறி விளக்கேற்றி திலீபனின் நினைவேந்தலை செய்ய முற்படுபவார்கள் என்ற அச்சம் காரணமாக காவல்துறையினர் மற்றும் அரச புலனாய்வு பிரிவினர் இவர்களது வீடுகள் மற்றும்  சில ஆலயங்களின் முன்னால் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றதாக தெரியவருகின்றது.