கூட்டுத் தலைமையாக பொது விடயங்களில் ஒன்றாகுவோம்.

24.11.2025 14:38:39

ஒற்றுமையாக இனம் சார்ந்து ஒவ்வொரும் தங்கள் தளத்தில் இருந்து கொண்டு பொது விடயங்களில் ஒன்றாக பொது மையத்தில் இருந்து செயற்பட அழைப்பு விடுக்கிறேன். இதற்கு சாதகமாக பதிலளியுங்கள். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சாதகமாக பதிலளித்துள்ளது. கஜேந்திரகுமாரும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் கூட்டுத் தலைமையாக பொது விடயங்களில் ஒன்றாகுவோம் என அழைப்பு விடுத்தார்.

சமகால நிலைமைகள் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் நேற்று (23) மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

கடந்த காலத்தில் தமிழ் தேசிய கட்சிகளுடன் கூட்டாக செயற்பட எல்லா கட்சிகளுடன் பேசினோம். எல்லோரின் வீடுகளுக்கும் தேடிப் போனேன். ஒருவரும் ஒத்துழைக்கவில்லை.

பிரிக்கப்படாத நாட்டுக்குள் மீளப் பெற முடியாத அதிகாரப்பகிர்வில் சமஷ்டி கட்டமைப்பை கொண்ட எந்த பெயரைக் கொண்ட தீர்வையும் நாம் ஏற்க தயார். ஒற்றையாட்சியை ஏற்கவுமில்லை. சமஷ்டியை கைவிடவுமில்லை.

கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் கஜேந்திரனும் சொல்வது போல தமிழ் அரசுக் கட்சி தமிழ் மக்களுக்கு துரோகம் செய்யவில்லை. கடல் வத்தும் கடல் வத்தும் என கொக்கு குடல் வத்தி போக முடியாது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தங்களுடன் பேசியிருக்கலாமே என்கிறார். மாகாண சபையை வேண்டாம் என சொல்பவரை எவ்வாறு அழைத்து செல்ல முடியும்.

அரசியல் தீர்வை அடைந்த பின்னர் ஏனைய பிரச்சினையை பார்க்கலாம் என்கிறார். அரசியல் தீர்வு வருவதற்குள் எல்லாம் முடிந்து விடும்.

இணைந்து செயற்படுவது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு அழைப்பு விடுத்தோம். அடுத்த மாத முற்பகுதியில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் பேசப்போகிறோம். அதை ஒத்த அழைப்பை கஜேந்திரகுமாருக்கும் வழங்கினோம்.

பொது விடயத்தில் அரசியலமைப்பும் வரும் மாகாண சபையும் வரும். கொச்சைப்படுத்தும் கருத்துக்களை சொல்ல வேண்டாம். மேட்டுக்குடியில் இருந்து நாங்கள் வரவில்லை என்பதால், நீங்கள் நாம் சொல்வதை கேட்கமாட்டீர்களோ, ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு பின்னர் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில்,மாகாண சபைத் தேர்தல் மற்றும் புதிய அரசியலமைப்பொன்றின் அவசியம் குறித்து இதன் போது ஆராயப்பட்டதோடு, வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தொடர்ந்தும் பழைய அரசியல் தீர்வு பொருத்தமற்றது என்பதால் அதற்காக புதிய அரசியல் தீர்வை நோக்கிச் செல்ல வேண்டுமென அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இங்கு குறிப்பிட்டார் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதியுடைய வரைபு வந்த பின்னர் பேசலாம் என்றே சொன்னோம். நாங்கள் அரசியலமைப்பு வரையோனும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சொல்கிறார். அது பிழையான அணுகுமுறை. தமிழ் அரசுக் கட்சி இறுமாப்புடன் கதைக்கவில்லை.

கஜேந்திரகுமாருக்கும் கடிதம் எழுதியிருக்கிறோம். அடக்கமாக பேச காரணம் ஒற்றுமையாக பயணிக்க விரும்புகிறோம். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்மை தொடர்ச்சியாக விமர்சிக்க முடியாது. நியாயமான விமர்சனத்தை ஏற்கலாம். துரோகம் ,காட்டிக்குடுப்பு, இனத்துரோகி என்ற வசனங்களே இவர்களுக்கு தெரியும். மக்களுக்கு பதில் சொல்ல நாம் தயார்.சொல்லில் தொங்கி கொண்டு மக்களை ஏமாற்ற வேண்டாம்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மாகாண சபை வேண்டாம் என்று சொன்னால் நாம் ஒத்துப்போக முடியாது. கஜேந்திரகுமாருடன் சுமூகமான உறவை பேணவே விரும்புகிறோம்.

நீங்கள் அடிக்க வெளிக்கிட்டால் நாம் மென்மையாக திருப்பி அடிப்போம். எங்களுடைய வாக்கு வங்கி குறைந்து விட்டது தான். ஏன் உங்கள் வாக்கு வங்கி குறையவில்லையா? எங்களை நீங்கள் தாக்கியதால் தான் தேசிய மக்கள் சக்தி வளர்ந்தது.

சமஷ்டியை கைவிடமாட்டோம் என ஜனாதிபதிக்கு முன்னாலேயே சொல்லி இருக்கிறோம். நான் இனி தேர்தல் கேட்கப் போவதில்லை. ஆனால் கட்சியில் கை வைத்தால் எந்த தரத்தில் பதில் வருகிறதோ அதே தரத்தில் பதில் கொடுக்கப்படும்.

ஒற்றுமையாக இனம் சார்ந்து ஒவ்வொரும் தங்கள் தளத்தில் இருந்து கொண்டு பொது விடயங்களில் ஒன்றாக பொது மையத்தில் இருந்து செயற்பட அழைப்பு விடுக்கிறேன். இதற்கு சாதகமாக பதிலளியுங்கள். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சாதகமாக பதிலளித்துள்ளது. கஜேந்திரகுமாரும் கடிதம் கிடைத்துள்ளதாக பேட்டி அளித்துள்ளார்.

கூட்டுத் தலைமையாக பொது விடயங்களில் ஒன்றாகுவோம். மக்கள் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். இனியாவது தமிழ் தேசிய கட்சிகள் பொது விடயத்தில் இணைந்து பேச வேண்டும் என தெரிவித்தார்.