சுயாதீனமான அரசியலமைப்பு சபையில் சிறிதரனுக்கு நெருக்கடி!

18.01.2026 15:48:47

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை, தற்போது அரசியலமைப்பு பேரவை பதவியில் இருந்து விலக வேண்டும் என அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருப்பது தொடர்பில் அறியக் கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“ நான் நினைக்கின்றேன் இது நாடாளுமன்ற உறுப்பினர்களால் வாக்களித்து தேர்வு செய்யப்பட்ட பதவி. அந்த விடயத்தில் அவர் அதனையும் கருத்தில் கொண்டுதான் செயல்படுவார் என நான் நினைக்கின்றேன்.

அரசியலமைப்பு பேரவைக்கு தலைவராக சபாநாயகர் இருக்கின்றார். இந்த விடயத்தை அரசியலமைப்பு பேரவை ஏதாவது நிர்பந்தங்கள் உள்ளாக்கப்படுகின்றன அல்லது நெருக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்ற விடயத்தையும் சபாநாயகருடன் பேசக்கூடிய சந்தர்ப்பம் இருக்கலாம்.

எனவே நெருக்குதல்கள் நிர்பந்தனைகள் தனிப்பட்ட முறையில் சிறீதரனுக்கு இடம்பெறக்கூடிய நிலை இருந்தாலும் அரசியலமைப்பு பேரவை சுயாதீனமாக செயல்படுகின்ற குழுவாக இருக்கின்றது.

அது முக்கியமான பதவிகளையும் நியமிக்கின்ற பொறுப்பையும் கொண்டிருக்கின்ற அடிப்படையில் இந்த விடயங்கள் அனைத்தும் கருத்தில் கொள்ளப்பட்டு சட்டபூர்வமான ஆலோசனைகளும் பெறப்பட்டுதான் அவர் அந்த முடிவை எடுப்பார் என்று நான் நினைக்கின்றேன்” என கூறியுள்ளார்.