கொதிக்கும் டெல்லி இன்று கூடும் நாடாளுமன்றம்!

22.07.2026 14:44:44

தலைநகர் டெல்லியில் உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது. ஒரு பக்கம் கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டம் நடத்தும் நிலையில், மற்றொரு புறம் அரசியல் கட்சிகளும் இதில் போராட்டங்களை ஆரம்பித்துள்ளது. இந்த பரபரப்பான சூழலில் தான் இன்றைய தினம் நாடாளுமன்றம் கூடுகிறது. டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் கல்வி துறையில் சீர்திருத்தங்கள் தேவை என்பதை கண்டித்து கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கு மிக பெரியளவில் இளைஞர்கள் ஆதரவு இருக்கிறது. அரசியல் பின்புலம் இல்லாத பலரும் இந்த போராட்டத்தில் அவர்களாகவே சென்று கலந்து கொள்கிறார்கள்.

இந்த மாணவர் போராட்டம் நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. நீட் போராட்டம் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், வினாத்தாள் கசிவு தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும், தேர்வு முறையில் சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர் பேரணி கடந்த திங்கள்கிழமை நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதனால் மோதல் ஏற்பட்ட நிலையில், தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. இந்த சம்பவத்தில் ஏராளமானோர் காயமடைந்ததாகவும், சிலருக்கு பலத்த காயமும் கூட ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. போலீசாரும் சிலர் காயமடைந்ததாக தெரிகிறது. நேற்றைய தினம் அரசியல் அரங்கிலும் இது எதிரொலித்தது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர். பல முறை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இறுதியில் நாள் முழுக்க ஒத்திவைக்கப்பட்டன. அதேபோல எதிர்க்கட்சி தலைவர்கள் ராகுல் காந்தி, கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் போராட்டத்தில் குதித்தனர்.

அவர்கள் யாருமே எதிர்பார்க்காத வகையில் பிரதமர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒரு கட்டத்தில் ராகுல் காந்தி சாலையிலேயே படுத்துவிட்டார். போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றபோது லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டு ராகுல் காந்தி மூக்கு உடைந்தது. இப்படி ஒட்டுமொத்த டெல்லியும் இந்த போராட்டத்தில் பரபரப்பின் உச்சத்தில் இருக்கிறது. இந்தச் சூழலில் தான் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் 3வது அமர்வு இன்று கூடுகிறது. இன்றும் நிச்சயம் எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் மாணவர் போராட்டம் குறித்து விவாதிக்க வலியுறுத்துவார்கள் என்றே தெரிகிறது.