காணாமல்போன 16 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்து !

24.05.2021 12:01:05

அரபிக் கடலில் காணாமல் போயுள்ள 16 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து மு.க.ஸ்டாலின், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு எழுதிய கடிதத்தில், ”அமீர் ஷா எனப் பெயர் கொண்ட மீன்பிடி விசைப்படகு கடந்த மே மாதம் 5 ஆம் திகதி கேரள மாநிலம் கோழிக்கோடு அருகில் உள்ள பைபோர் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 16 மீனவர்களுடன் கடலுக்கு சென்றது.

டாக்தே புயல் காரணமாக குறித்த மீனவர்களை தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து இந்திய கடலோர காவல்படையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு கடலோர காவல்படையினரால் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

குறித்த மீனவர்கள் தொடர்பான தகவல் ஏதும் இதுவரை பெறப்படாத நிலையில், அவர்களது குடும்பத்தினரிடையும், மீனவ சமுதாய மக்களிடையும் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஆகவே அவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.