ஒருவரிடம் 6,500 ரூபாவை பறித்தெடுத்த 3 பொலிஸார் கைது

11.08.2023 09:17:03

மட்டக்களப்பில் உணவகம் ஒன்றில் வேலை முடித்து விட்டு ஏறாவூரிலுள்ள தனது வீட்டுக்கு இரவு 11 மணிக்கு திரும்பிக் கொண்டிருந்த ஒருவரிடம் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிஸார் 6500 ரூபா பணத்தை பறித்தொடுத்த சமபவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 3 பொலிஸாரை இன்று (11) அதிகாலையில் மாவட்ட குற்ற விசாரணை பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த நபர் சம்பவ தினமான புதன்கிழமை இரவு மட்டக்களப்பிலுள்ள உணவகத்தில் தனது கடமையை முடித்து கொண்டு இரவு 11 மணியளவில் ஏறாவூர் மிச் நகரிலுள்ள வீட்டிற்கு மோட்டர் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்த பொது அந்த பகுதியில் இரவு ஜீப் வண்டியில் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒரு பொலிஸ் சாஜன் உட்பட 3 பேர் குறித்த நபரை நிறுத்தி சோதனையிட்டனர்.

இதனையடுத்து குறித்த நபருக்கு அடையாள அட்டை இல்லாததையடுத்து அவரை தமது ஜீப் வண்டியில் ஏற்றி அந்த பகுதி வீதிகளில் சுற்றிதிரிந்து 25,000 ரூபா பணம் தந்தால் விடுவதாக அல்லது கைது செய்து சிறையில் அடைப்பதாக அச்சுறுத்திய நிலையில் அவர் தன்னிடம் பணம் இல்லை 6500 ரூபா மாத்திரம் தான் இருக்கின்றது என தெரிவித்த போது அந்த பணத்தை அவரிடமிருந்து பறித்தெடுத்து விட்டு ஜீப் வண்டியில் இருந்து அவரை இறக்கி விட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் உயர் அதிகாரியின் கவனத்திற்கு சென்றதையடுத்து உடனடியாக அந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற் கொண்டு அவர்களை கைது செய்யமாறு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவிடம் ஓப்படைக்கப்பட்டதையடுத்து அவர்கள் விசாரணையின் பின்னர் அந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரு சிங்களவர் ஒரு தமிழர் உட்பட 3 பொலிஸாரை சம்பவ தினமான இன்று (11) அதிகாலை 5.30 மணிக்கு கைது செய்து மட்டு. தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.