பிரித்தானியாவுக்கு ஏற்படவிருக்கும் பேராபத்து!

18.01.2025 08:23:08

தடைகளில் சிக்காமல் இருக்க ரஷ்யா பயன்படுத்தும் எண்ணெய் கப்பல்களால் பிரித்தானியவுக்கும் சர்வதேச கடற்பகுதிக்கும் மிக மோசமான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிவிவகார செயலாளர் டேவிட் லாமிக்கு அவசர கடிதம் எழுதியுள்ளதுடன், அத்தகைய கப்பல்களால் ஏற்படக்கூடிய பேரழிவு ஆபத்துகள் குறித்தும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ரஷ்யா பயன்படுத்தும் இந்தக் கப்பல்களால் பிரித்தானியா கடற்கரையில் எண்ணெய் கசிவு போன்ற சுற்றுச்சூழல் பேரழிவு ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

கடலோர மக்கள் மற்றும் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்க பிரித்தானியா கடலில் ரஷ்யாவின் சட்டவிரோத கப்பல்கள் பயணிக்காத மண்டலங்கள் நிறுவப்பட வேண்டும் என்று லேபர் கட்சியின் உமா குமரன் மற்றும் டிம் ரோகா ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.

ரஷ்யாவின் அத்தகைய கப்பல்களுக்கு கடந்த ஆண்டு இறுதியில் லாமி பெரும் தடைகளை விதித்திருந்தார். இத்தகைய கப்பல்களானது பெரும்பாலும் மிகவும் பழமையானதாகவும், உரிமையாளர் யார் என்பதிலும் சிக்கல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் சுமார் 10 இதுபோன்ற டேங்கர் கப்பல்கள் ஆங்கிலக் கால்வாய் வழியாகச் செல்வதாகவும், இந்த ஆபத்தான கப்பல்களால் நமது நீர்நிலைகள் மற்றும் கடலோர சமூகங்களுக்கு ஏற்படும் ஆபத்து மிகப்பெரியது என்றும் டிம் ரோகா தெரிவித்துள்ளார்.

இதனிடையே உக்ரைனின் KSE என அமைப்பு முன்னெடுத்த விசாரணையில், பழமையான கப்பல்களால் ரஷ்யா ஒரு படையை உருவாக்கியுள்ளதாகவும், கடல்சார் பாதுகாப்பு சட்டங்களை பெரும்பாலும் புறக்கணித்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் இதுபோன்ற கப்பல்களால் கடைசி நொடியில் பேராபத்து தவிர்க்கப்பட்ட பல சம்பவங்களும் பட்டியலிடப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் இப்படியான ஒரு கப்பல் டென்மார்க்கில் விபத்தில் சிக்கியிருந்தது.

பொதுவாக 15 ஆண்டுகள் மட்டுமே ஒரு கப்பல் ஏற்றுமதிக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என சர்வதேச விதி உள்ளது. ஆனால் ரஷ்யா பயன்படுத்தும் பல கப்பல்கள் மிகவும் பழமையானவை என்றே கூறப்படுகிறது.

மட்டுமின்றி, அவர்களிடம் புதுப்பித்த காப்பீடும் இல்லை, அதாவது ஒரு எண்ணெய் டேங்கர் கப்பலில் கசிவு ஏற்பட்டால், கசிவு ஏற்பட்ட நாடு மொத்த செலவையும் ஏற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.