துறைமுக நகர மேயரின் குடியுரிமையைப் பறித்த ஜெலென்ஸ்கி!
| 
			 ரஷ்யாவிற்கு ரகசிய ஆதரவு என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ஒடேசா மேயரின் குடியுரிமையை உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ரத்து செய்துள்ளார். ஒடேசா மேயரிடம் ரஷ்ய கடவுச்சீட்டு இருப்பதை உறுதி செய்துள்ள நிலையிலேயே செவ்வாயன்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், உக்ரைன் பொருளாதாரத்திற்கு மிக முக்கியமான கருங்கடல் துறைமுக நகரத்தை 11 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த பிரிவினையை ஏற்படுத்தும் ஒரு நபரின் பதவிக்காலத்தையும் ஜெலென்ச்கி முடிவுக்குக் கொண்டுவந்துள்ளார்.  | 
		
| 
			 ஆனால், இந்த விவகாரத்தை தாம் நீதிமன்றத்தில் எதிர்கொள்ள இருப்பதாக ஒடேசா மேயரான 60 வயது Hennadiy Trukhanov அறிவித்துள்ளார். தம்மிடம் ரஷ்ய கடவுச்சீட்டு இருப்பதாக வெளியான தகவலை மறுத்துள்ள அவர், மேயராக தொடர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். உக்ரைன் அரசு அதிகாரிகள் அல்லது அரசியல்வாதிகள் இரட்டைக் குடியுரிமை வைத்திருப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. இதனிடையே, நகரத்தை வழி நடத்த ஒரு புதிய இராணுவ நிர்வாகத்திற்குத் தலைமை தாங்க விரைவில் ஒருவரை நியமிப்பதாக ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். ஒடேசாவில் பல பாதுகாப்பு சிக்கல்கள் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ளதாகவும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, உள்நாட்டு பாதுகாப்பு முகமையான SBU வெளியிட்டுள்ள அறிக்கையில், Trukhanov செல்லுபடியாகும் ரஷ்ய கடவுச்சிட்டு வைத்திருப்பதாக தங்களிடம் ஆதாரம் உள்ளது என குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் ட்ருகானோவின் பெயர் மற்றும் முகம் கொண்ட ஒரு ரஷ்ய கடவுச்சீட்டின் நகலையும் வெளியிட்டுள்ளனர். பிப்ரவரி 2022 இல் தெற்கு உக்ரைன் முழுவதும் தீவிர தாக்குதல் முயற்சியில் ஈடுபட்ட ரஷ்யப் படைகளால் ஒடேசா நகரத்தை மட்டும் அடைய முடியவில்லை. ஆனால், திடீரென்று ஒடேசா நகரம் ரஷ்யாவின் தொடர் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலுக்கு இலக்காக தொடங்கியது. மட்டுமின்றி, 2014ல் ரஷ்ய இராணுவம் வலுக்கட்டாயமாக கிரிமியா தீபகற்பத்தை கைப்பற்றியதன் பின்னர், ரஷ்ய ஆதரவு உக்ரேனிய மக்களை வெளியேற்ற வேண்டும் என்ற நடவடிக்கைகளுக்கு எதிராகவும் ஒடேசா மேயர் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  |