வியாழேந்திரனுக்கு எதிராக போராட்டம்

19.02.2024 15:00:00

இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு ஆளாகாமல் செங்கலடி பிரதேச செயலாளர் சட்டப்படி தமது கடமையை புரியுமாறும், இராஜாங்க அமைச்சரை ஏறாவூர் பற்று பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் பதவியை பறிக்குமாறு கோரியும், சவப்பெட்டியுடன் இருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

 கல், மண் மற்றும் கிறல் அகழ்வில் சட்டரீதியாக ஈடுபட்டு வரும்  இருவரே,  மட்டு- செங்கலடி பிரதேச செயலகத்துக்கு அருகில், சவப்பெட்டியுடன் சாகும்வரை உண்ணாவிரத போரட்டத்தில்,  திங்கட்கிழமை (19) ஈடுபட்டுள்ளனர். 

கல், மண் மற்றும் கிறவல் என்பனவற்றை சட்டரீதியாக அனுமதி பெற்று அகழ்வில் ஈடுபட்டுவருபவர்களின் 2024 ஆண்டு அனுமதியை புதுப்பிக்க இராஜாங்க அமைச்சரின் சிபார்சு இருந்தால் மட்டும் புதுப்பிக்க முடியும் என பிரதேச செயலாளர் அனுமதி பத்திரத்தை புதுப்பிக்க 
 மறுத்து வருவதை அடுத்தே இராஜாங்க அமைச்சரின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்

இது தொடர்பாக உண்ணாவிரத போரட்டத்தில்  ஈடுபட்டு வரும் இருவரும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்

“செங்கலடி பிரதேசத்தில் கல், மண் மற்றும் கிறவல் என்பனவற்றுக்கு சட்டரீதியாக அனுமதி பெற்று பலரும் அகழ்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந் நிலையில் 2023 டிசெம்பர் 31 ம் திகதியுடன் அனுமதிப்பத்திரம் காலவதியானதை அடுத்து 2024 ம் ஆண்டு அதனை புதுப்பிப்பதற்கு,  அகழ்வு பணியில் ஈடுபட்டுவருபவர்கள் பிரதேச செயலகத்திற்கு சென்றால் பிரதேச செயலாளர் அனுமதி பத்திரத்தை புதுப்பிக்க இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்  சிபார்சு வழங்கினால் மட்டும் அதனை புதுப்பித்து தரமுடியும் எனக்கூறி புதுப்பிக்க மறுப்பு தெரிவித்து வருகின்றார்” என்றனர்.

“இதனையடுத்து மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து பல பிரச்சனைகளை முன்வைத்தோம் அவர் அந்த கடிதத்தை பிரதேச செயலாளருக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்தார். ஆனால், இதுவரை பதில் எதுவும் இல்லை” என்றனர். 

  “நாங்கள் புதிதாக ஒன்றும் கேட்கவில்லை. கல், மண் மற்றும் கிறவல்  அகழ்வதற்கு அது சார்ந்த திணைக்களங்கள் பரிசோதனை செய்து அதற்கான அனுமதியை வழங்கி நாங்கள் ஏற்கெனவே அகழ்வு பணியினை மேற்கொண்டுவருகின்றோம்

ஒவ்வொரு கல்குவாரியிலும் 10 க்கு மேற்பட்டவர்கள் வேலை செய்கின்றனர். இவ்வாறு 300 க்கு மேற்பட்டவர்கள் வேலை செய்துவருகின்றனர். இவர்களது வாழ்வாதாரமே இதுதான். 

“இராஜாங்க அமைச்சரை தனிப்பட்ட முறையில் சந்தித்தால்தான் அனுமதி வழங்கப்படும் என்றால் இதில் யார் அதிகாரிகள்? அரசியல் ரீதியாகவா அல்லது பேரம் பேசுவதற்கா ? அமைச்சரை சந்திக்க வேண்டும் என கேள்வியெழுப்பிய அவர், இவ்வளவு காலமும் அனுமதிபத்திரம் வழங்க அரசியல் இருந்ததே இல்லை. இந்த முறைதான் அனுமதி பத்திரங்களை புதுப்பிப்பதில் அரசியல் வாதிகள் சம்பந்தப்பட்டுள்ளனர் எங்கள் பிரதேசத்தில் அபிவிருத்திக்குழு என்ற அதிகாரத்தை வைத்துக் கொண்டு அவருக்கு ஏற்றமாதிரி அதிகாரிகளை துஸ்பிரயோம் செய்து வருகின்றார்” என்றனர். 

மேலும்  “எனவே, இந்த அதிகார துஷ்பிரயோகத்துக்கு முற்றுபள்ளி வைக்க வேண்டும். அரச சேவை, அரச சேவையாக இயங்கவேண்டும் என்பதற்காக தீர்வு எட்டும்வரை சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ள உள்ளோம்” என தெரிவித்தனர்.