நிவாரணமளிக்க அவசரகால சட்டம் அவசியமில்லை!
|
பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமளிக்க அவசரகால சட்டம் அவசியமில்லை. ஆனால் இப்போது டித்வா காரணமாகவே அவசரகால சட்டம் தேவைப்படுகின்றது என்று கூறி எங்களை ஏமாற்ற முடியாது. மக்களிடையே வளரும் எதிர்ப்பை மறுப்பதற்கும் அதனை அடக்குவதற்கும் தேவைப்படும் அதிகாரமாகவே இது பார்க்கப்படுகிறது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார் |
|
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (6) நடைபெற்ற பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவசரகால சட்டம் தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்தை நாங்கள் எதிர்ப்பதுடன், இது தொடர்பில் வாக்கெடுப்பை கோருவோம். இதன்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்களிப்போம். நாங்கள் இதனை ஏன் எதிர்க்க வேண்டும் என்பதற்கு தமிழர்களின் வரலாற்றை எடுத்துப்பார்த்தால் புதிதாக பதிவு செய்யத் தேவைப்படாது. இப்போது கூட தையிட்டியில் நாங்கள் போராடும் போது பொலிஸார் வழமைப் போன்று நடவடிக்கை எடுக்கின்றனர். அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தியுள்ள காலத்தில் இதனை காட்டி நடவடிக்கை எடுக்கின்றனர். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை கொடூரமான சட்டம் இதனை நீக்கப் போகின்றோம் என்று கூறிக்கொண்டு இப்போது கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வடக்கு மற்றும் கிழக்கில் அரசியல் ரீதியில் அரசாங்கத்தை எதிர்க்கும் போது இதனை பயன்படுத்துகின்றனர். இதனை நாங்கள் கடுமையாக எதிர்க்கின்றோம். டித்வா புயல் சேதங்கள் தொடர்பான திட்டங்கள் சீர்குலைக்கப்படக்கூடாது என்பதற்காகவே அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் இதற்கு முன்னரும் இது போன்ற அனர்த்தங்கள் நடந்துள்ளன. வடக்கு மற்றும் கிழக்கும் பாதிக்கப்பட்டுள்ளன. பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதுவும் செய்யவில்லை. இதற்கு அவசரகால சட்டம் அவசியமில்லை. ஆனால் இப்போது டித்வா காரணமாகவே அவசரகால சட்டம் தேவைப்படுகின்றது என்று கூறி எங்களை பேய் காட்ட முடியாது. நிச்சயமாக அரசியல் செயற்பாடுகளுக்கு மக்களிடையே வளரும் எதிர்ப்பை மறுப்பதற்கும் அதனை அடக்குவதற்கும் உங்களுக்கு தேவைப்படும் அதிகாரமாகவே பார்க்கப்படுகின்றது. இந்திய மீனவர்களின் ரோலர் படகுகள் எமது மீனவர்களின் சொத்துக்களை அழிப்பது தொடர்பில் ஒவ்வொரு மாதமும் கூறியுள்ளனர். அடிக்கடி இந்த பாராளுமன்றத்தில் இந்த விடயம் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையில் இந்த அரசாங்கம் எவ்விதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2025ஆம் ஆண்டில் 15 ரோலர்களும், இந்த வருடத்தில் 6 ரோலர்களை மட்டுமே பிடித்துள்ளீர்கள். ஆனால் ஆயிரக்கணக்கான படகுகள் வந்து எமது மீனவர்களின் சொத்துக்களை அழிக்கின்றன. கடந்தகால ஆட்சியாளர்களும் இவ்வாறே செயற்பட்டனர். 2013ஆம் ஆண்டில் இருந்து 500 இந்திய ரோலர் படகுகள் பிடிக்கப்பட்டுள்ளதுடன், 319 படகுகள் எவ்வித நிபந்தனைகளும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளன. 30 வழக்குகள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 2871 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 2779 பேர் எவ்வித நடவடிக்கையும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளனர். இப்படியொரு நிலைமை இருக்கையில் அரசாங்கமும் ஏன் இப்படி நடந்துகொள்கிறது. இராஜதந்திரம், இந்தியாவை பகைக்கக்கூடாது என்று கூறுகின்றீர்கள். இதுபோன்று தெற்கில் நடந்தால் பார்த்துக்கொண்டு இருப்பீர்களா? வடக்கு, கிழக்கில் பெரும்பான்மையாக தமிழர்கள் இருப்பதாலேயே இவ்வாறு நடந்துகொள்கின்றீர்கள். படகுகளை பிடிக்க முடியாவிட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடுகளை வழங்க முடியதா? இதேவேளை திருகோணமலையில் கடந்த முதலாம் திகதி கோகன்ன ரஜமகா விகாரையின் காலமான விகாராதிபதியின் உடல் ஹேய்சர் விளையாட்டு மைதானத்தில் எரிக்கப்பட்டது. அந்த மைதானத்தை தமிழ் சிறுவர்களே அதிகமாக பயன்படுத்துகின்றனர். தமிழ் மக்களின் கலாச்சாரத்திற்கமைய எரிக்கப்பட்ட இடங்களில் மக்கள் கால் வைப்பதில்லை. ஆனால் தேரர் ஒருவர் அவ்விடத்தில் எரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு அவர்களால் விளையாட முடியாது. இதேவேளை விடுதலைப் புலி போராளிகள் உடல்கள் புதைக்கப்பட்ட இடங்கள் இராணுவத்தினர் வசமுள்ளன. அவற்றின் மீது நடக்கின்றனர். அந்த இடங்களை மக்களிடம் மீள கையளிக்க வேண்டும். மக்களின் உணர்வுகள் மற்றும் உணர்வுபூர்வமான விடயங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றார். |