இந்தியாவுக்கு தாக்குதல் எச்சரிக்கை!

09.10.2022 09:34:22

இலங்கை கடற்பரப்பின் ஊடாக இடம்பெறக் கூடிய பயங்கரவாத சாத்தியக் கூறுகளை சமாளிப்பதற்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு ஒன்றை அமைக்குமாறு தமிழக அரசாங்கத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணியான பி.ஜெகன்நாத் என்பவரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் மீண்டும் செயற்படுத்துவதற்கான சாத்தியம் உள்ளதாக அவர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயங்கரவாதிகள் இலங்கையில் இருந்து இந்தியாவை தாக்கக் கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாநில அரசாங்கத்தை இழிவுப்படுத்துதல், வதந்தியை பரப்புதல் மற்றும் அச்சத்தை ஏற்படுத்துதல் என்பவற்றுக்காக குறித்த பொது நல வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை என்றும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.