ராஜபக்ஷ தரப்பினர், மக்கள் மீது அக்கறை கொண்டவர்கள் அல்ல!

29.03.2024 14:04:43

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவே முன்னிலையாவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.

 

இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே  அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”ராஜபக்ஷ தரப்பினர் இந்த நாட்டின் மீதோ மக்கள் மீதோ அக்கறைகொண்டவர்கள் அல்ல. மாறாக அவர்கள் தங்களின் அரசியல்தேவைகளுக்காகவே செயற்படுகின்றனர்.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் இழைக்கப்பட்ட தவறுகளை நாட்டு மக்கள் நன்கு அறிவர் எனவே நாமல் ராஜபக்ஷ எந்தவொரு வேடம் தரித்துவந்தாலும் மக்களுக்கு ராஜபக்ஷ தரப்பினர் மீது நம்பிக்கை ஏற்படாது. திருகோணமலையில் ஒழிந்திருந்த ராஜபக்ஷ தரப்பினர் ரணில் விக்ரமசிங்கவின் புண்ணியத்தால் வெளிஉலகுக்கு வந்தனர்.

இன்று நாமல் ராஜபக்ஷ குடும்ப அரசில்தேவைக்காக அடித்தளமிட்டுள்ளார்.ஆனாலும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபகஷ செயற்பட முடியாது ஏனென்றால் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவே முன்னிலையாவார். ரணில் ராஜபக்ஷ தரப்பினரின் அரசியல் நாடகங்களை மக்கள் நன்கு அறிவர்” இவ்வாறு சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்