மீண்டும் தலை தூக்கும் எபோலா!

20.10.2022 09:36:30

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் எபோலா நோய்த்தொற்று பரவல் தீவிரமடைந்ததை அடுத்து அங்கு இரு முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டின் அதிபர் யோவெரி முசிவேனி முபேந்தே மற்றும் கசன்டா ஆகிய நகரங்களில் மூன்று வாரம் ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வருவதாக அறிவித்துள்ளார்.

இதையடுத்து இந்த நகரங்களில் வழிபாட்டுத் தலங்கள், மதுபானக்கடைகள், இரவு விடுதிகள் அனைத்தும் மூடப்படுகின்றன.

இதுவரை எபோலோ நோய் தொற்று காரணமாக 19 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.

11,000க்கும் மேற்பட்ட உயிரிழப்பு

கடந்த செப்டம்பர் மாதத்தில் உகாண்டாவில் முதல் பாதிப்பு கண்டறியப்பட்டு அங்குள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று போல எபோலாவுக்கு லாக்டவுன் தேவைப்படாது என அதிபர் முசிவேனி சில நாள்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

ஆனால் தொற்று தற்போது தீவிரத்துடன் பரவுவதால் வேறு வழியின்றி இரு முக்கிய நகரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மற்றொரு அண்டை நாடான காங்கோவிலும் எபோலா பரவலுக்கான அறிகுறிகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், ஆப்ரிக்க நாடுகளில் 2013 - 2017 காலகட்டத்தில் எபோலா தீவிரமாக பரவி 11,000க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.