நட்சத்திர வீரருக்கு வலைவிரிக்கும் புதிய ஐபிஎல் அணி

29.11.2021 11:25:01

 புதிய ஐபிஎல் அணியான லக்னோ அணி, பஞ்சாப் வீரர் கே.எல்.ராகுலை தங்கள் அணியில் இடம்பெற வைக்க மெகா ஆஃபர் வழங்கியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

நவம்பர் இறுதிக்குள் 8 ஐபிஎல் அணிகளும் தக்க வைக்கும் 4 வீரர்களின் பெயரை இறுதி செய்ய வேண்டும்.

மீதமுள்ள வீரர்களை 2022 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் விட வேண்டும்.

இம்முறை RTM முறை இல்லாததால், ஒருமுறை வீரரை அணியிலிருந்து விடுவித்துவிட்டால் அந்த அணியால் அவரை மீண்டும் தக்க வைக்க முடியாது.

தற்போது வரை எந்த அணியும் தக்க வைக்கும் வீரர்களின் விவரங்களை வெளியிடவில்லை.

ஆனால், பஞ்சாப் அணியிலிருந்து கே.எல்.ராகுல் விலக உள்ளதாக பல வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்துள்ளன.

ஐபிஎல் விதிகளின் படி, புதிய இரண்டு அணிகள், ஐபிஎல் ஏலத்திற்கு முன்பு தலா 3 வீரர்களை தேர்வு செய்ய வேண்டும்.

இந்நிலையில், லக்னோ அணி, பஞ்சாப் வீரர் கே.எல்.ராகுலுக்கு 20 கோடி ஆஃபர் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

RPSG குழுமம் லக்னோவைச் சேர்ந்த ஐபிஎல் அணியை ரூ.7090 கோடிக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.

அதுபோல், ஐதராபாத் வீரர் ரஷீத் கானுக்கு லக்னோ அணி 16 கோடி ஆஃபர் வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.