விஜய் அடுத்த பிரதமரா? - தமிழிசை கொடுத்த பதில்!
|
தமிழக முதல்வர் விஜய் பிரதமர் ஆகிறாரா என்ற கேள்விக்கு, அவர் முதலில் முதல்வர் பதவியை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பதில் அளித்துள்ளார். இந்தியா டுடே - சி வோட்டர் இணைந்து நடத்திய சமீபத்திய 'மூட் ஆஃப் தி நேஷன்' கருத்துக்கணிப்பில், 2029 மக்களவைத் தேர்தலில் நாட்டின் அடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என்ற கேள்விக்கு, தவெக தலைவர் விஜய்க்கு 9.2% வாக்குகள் கிடைத்துள்ளன. |
|
இதில் பிரதமர் நரேந்திர மோடி (48.7%), காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி (27.1%) ஆகியோருக்கு அடுத்தபடியாக நாட்டின் 3-வது பிரதமர் வேட்பாளராக விஜய் உருவெடுத்துள்ளார். மேலும், தமிழக முதல்வர் விஜய் 2029ல் பிரதமர் ஆகும் வாய்ப்பிருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவுகள் பரவி வருகின்றன. இந்நிலையில் இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த தமிழிசை சௌந்தரராஜன், "தமிழக முதலமைச்சர் விஜய்க்கு மக்கள் தற்போது மிகப்பெரிய வாய்ப்பை வழங்கியுள்ளனர். அந்த வாய்ப்பை அவர் தலைமையிலான அரசும், அவரது கட்சியும் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பிரதமர் நரேந்திர மோடிக்கு இணையாக நாட்டின் பிரதமர் பதவிக்கு வேறு ஒருவரை தற்போது யாராலும் சிந்தித்துக்கூட பார்க்க முடியாது. நரேந்திர மோடி தொடர்ந்து மூன்று முறை நாட்டின் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டதுடன், அதற்கு முன்பு 12 ஆண்டுகள் மாநில முதலமைச்சராகவும் பணியாற்றியவர். இதன் மூலம் 25 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட அரசியல் அனுபவத்தை அவர் பெற்றுள்ளார். எனவே, அவரது அரசியல் அனுபவத்துக்கு இணையாக வேறு யாரையும் ஒப்பிட முடியாது. ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கவும், எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கவும் உரிமை உள்ளது. இருப்பினும், பிரதமர் மோடிக்கு இணையாக செயல்படுவது கூட எளிதான விஷயம் அல்ல. தென் மாநிலங்கள், வட மாநிலங்கள் என பிரதமர் மோடி எந்தவித பாகுபாடும் காட்டுவதில்லை. குறிப்பாக தென் மாநிலங்களின் வளர்ச்சியில் அவர் அதிக அக்கறை செலுத்தி வருகிறார். தமிழர்களின் பெருமையான திருக்குறளை உலக அளவில் பிரதமர் மோடி எடுத்துச் சென்ற அளவுக்கு வேறு யாரும் செயல்பட்டதாகக் கூற முடியாது." எனத் தெரித்துள்ளார். மேலும், சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமான மற்றும் ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெற வேண்டும். சட்டப்பேரவை சண்டை மன்றமாக மாறக்கூடாது என்றும் தமிழிசை கூறியுள்ளார். |