
ஜனாதிபதி இன்று யாழ் விஜயம்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (01) யாழ்ப்பாணத்தில் பல புதிய அபிவிருத்தி திட்டங்களின் தொடக்க விழா மற்றும் திறப்பு விழாவில் பங்கேற்கவுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் மயிலிட்டி மீன்பிடித் துறைமுக அபிவிருத்தி திட்டத்தின் மூன்றாம் கட்டம் இன்று (01) காலை ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
இதன் கீழ், வட மாகாணத்தில் உள்ள மீனவ சமூகத்தினருக்கும், கிழக்கு மற்றும் தென் மாகாணங்களிலிருந்து வரும் மீன்பிடி படகுகளுக்கும் நீர், மின்சாரம், எரிபொருள் போன்ற அடிப்படை மற்றும் அத்தியாவசிய வசதிகள் மற்றும் குளிர்பதன வசதிகள், வலைகளை சீரமைக்கும் வசதிகள், ஏல மண்டப வசதிகள் மற்றும் வானொலி தொடர்பு மைய வசதிகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மீன்பிடித் துறைமுகத்தின் தொடக்க விழாவிற்குப் பிறகு, அந்த இடத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார்.
இதேவேளை, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டச் செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அலுவலகம், நவீன தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது.
வட மாகாணத்திலிருந்து கடவுச்சீட்டு விண்ணப்பங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், எளிதில் அணுகக்கூடிய இடத்திற்கான தேவையை பூர்த்தி செய்வதற்காக இந்த பிராந்திய அலுவலகம் திறக்கப்படுகிறது.
இதற்கிடையில், யாழ்ப்பாண நூலகத்தின் ஈ-நூலகத் (E-Library) திட்டமும் இன்று ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இதன் மூலம் உலகில் எங்கிருந்தும் ஒருவருக்கு யாழ்ப்பாண பொது நூலகத்தில் உள்ள புத்தகங்களை ஒன்லைனில் பார்வையிட வாய்ப்பு கிடைக்கும்.
முன்மொழியப்பட்ட புதிய யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமானப் பணிகளும் இன்று பிற்பகல் ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், அதன் பிறகு அந்த இடத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார்.